Published : Apr 13, 2025, 03:00 PM ISTUpdated : Apr 13, 2025, 03:05 PM IST
12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4 முதல் நடக்கிறது. ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை அளிக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வினை 7518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதினர். இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 04-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
24
Postgraduate Teachers Association
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கோரிக்கை
இந்நிலையில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்துதல் பணிக்கு ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே கிறிஸ்துவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்ரல் 18-ம் தேதியும், ஈஸ்டர் ஏப்ரல் 20-ம் தேதியும் கொண்டாடப்படவுள்ளன.
விடைத்தாள் திருத்துதல் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டும்
இதற்கு இடைபட்ட ஏப்ரல் 19-ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணி நடைபெறவிருக்கிறது. இதனால் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையை உணர்ந்து ஏப்ரல் 19-ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இது ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறந்த முறையில் கொண்டாட உதவும்.
மேலும், மற்ற ஆசிரியர்களுக்கும் தொடர் பணிகளுக்கு இடையே சிறு ஓய்வு கிடைக்கும். அது அடுத்து வரும் நாட்களில் ஆசிரியர்கள் புத்துணர்ச்சியுடன் பணிபுரிவதற்கு வழிவகுக்கும். எனவே ஏப்ரல் 19-ம் தேதி சனிக்கிழமை விடைத்தாள் மதிப்பீட்டு முகாமுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.