CBSE Language Policy : மும்மொழி கொள்கை மாணவர்களுக்கு கூடுதல் சுமை - அண்ணாமலை கடும் எதிர்ப்பு

Published : May 26, 2026, 05:40 PM IST

CBSE Language Policy : சிபிஎஸ்இ-யின் மும்மொழி கொள்கை குறித்த அறிவிப்புக்குத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

PREV
14
மூன்றாவது மொழிக்கு பொதுத்தேர்வு இல்லை

தேசிய கல்விக் கொள்கை - 2020 மற்றும் தேசிய பள்ளிக் கல்வி பாட செயல்திட்டம் - 2023 ஆகியவற்றின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அண்மையில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதன்படி, வரும் 2026 ஜூலை 1-ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கல்வித் திட்டம் கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் பயிலும் மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் கண்டிப்பாக இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், மூன்றாவது மொழியாக ஒரு வெளிநாட்டு மொழியைத் தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பைப் பொறுத்தவரை, இந்த மூன்றாவது மொழிக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

24
அண்ணாமலையின் கண்டனம்

சிபிஎஸ்இ-யின் இந்த திடீர் அறிவிப்புக்குத் கண்டனம் தெரிவித்து, தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் அண்ணாமலை, கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் சிபிஎஸ்இ அமைப்பு, மாணவர்களுக்கு 6-ஆம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அதில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தது. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட இலக்கிய மற்றும் கலாசார பாரம்பரியத்தைச் சிறு வயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள இது உதவும் என்பதால், அந்த முடிவை நான் வரவேற்றேன்.

ஆனால், அந்த அறிவிப்பில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியைக் கட்டாயமாக்கும் திட்டம், இன்றிலிருந்து மூன்று ஆண்டுகள் கழித்து, அதாவது 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

34
முந்தைய அறிவிப்பை மீறிய சிபிஎஸ்இ

இப்படியிருக்க, கடந்த மே 15, 2026 அன்று சிபிஎஸ்இ அனைத்து இணைப்புப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், தங்களது முந்தைய அறிவிப்பை மீறி, நடப்பு (2026-27) கல்வியாண்டிலிருந்தே 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையைக் கட்டாயமாக்கியுள்ளது.

சிபிஎஸ்இ அமைப்பின் இந்தத் திடீர் மாற்றம் அனைத்து பெற்றோர்களுக்கும், குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், மாணவர்கள் ஏற்கனவே 6-ஆம் வகுப்பில் தங்களுக்குப் பிடித்த மொழியைத் தேர்வு செய்து படித்து வரும் நிலையில், தற்போது 9-ஆம் வகுப்பில் திடீரென மற்றொரு புதிய மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது என்று திரு.அண்ணாமலை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

44
மனஅழுத்தம் ஏற்படும்

மிகவும் குறுகிய காலத்திற்குள் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவது, குழந்தைகளுக்குத் தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். இது அவர்களின் ஒட்டுமொத்தக் கல்வித் திறனையும், கற்றல் ஆர்வத்தையும் பெருமளவில் பாதிக்கும்.

எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த புதிய சுற்றறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கும் திட்டத்தை, முன்பு திட்டமிட்டபடி 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். சிபிஎஸ்இ-யின் இந்தத் திடீர் உத்தரவு நாடு முழுவதும் உள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே தற்பொழுது பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories