பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் அருள் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையேயான மோதல் தற்போது நிர்வாகிகள் இடையேயான மோதலாக மாறி உள்ளது. இரு தரப்பு இடையே கடந்த சில மாதங்களாக இணையதளம் வாயிலாக காரசாரமான கருத்து மோதல்கள் இருந்து வந்தன.
இந்நிலையில் ராமதாஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான அருள் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பாமக நிர்வாகியின் இல்ல துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தனது ஆதரவாளர்கள் சுமார் 50 நபர்களுடன் காரில் பயணித்துள்ளார். துக்க வீட்டில் கலந்து கொண்டு திரும்பி வந்த அருளை அன்புமணி ஆதரவாளர்கள் வழி மறித்தனர்.
24
5 பேர் படுகாயம்
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அன்புமணி ஆதரவாளர்கள், கட்டை, கம்பி உள்ளிட்ட கொடூரமான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் அருளுடன் வந்த நிர்வாகிகள் 5 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இவர்கள் பயணித்த வாகனங்களும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது.
34
அன்புமணி கூறியே தாக்குதல் நத்தப்பட்டது..
தாக்குதல் தொடர்பாக அருள் கூறுகையில், “அன்புமணி கூறி தான் இவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இது தான் அன்புமணியின், டீசண்ட், டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ். இவர்களுக்கு தெரிந்தது இது மட்டும் தான். நான் என் காரில் இருந்து இறங்காததால் நான் உயிர் தப்பி உள்ளேன். காரில் இருந்து இறங்கியிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். தாக்குதல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம். காவல் துறையினர் நியாயமாக செயல்படுவார்கள் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் ராமதாஸ் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட நிலையில், மாநகரம் முழுதும் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரு தரப்பு உயர்மட்ட நிர்வாகிகளை அழைத்து சமரசம் பேசும் முயற்சியிலும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.