கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி

Published : Feb 16, 2026, 04:25 PM IST

தமிழக வரலாற்றில் ஒரே மாதத்தில் 50 குவாரிகள் ஏலம் விடப்பட்டதில்லை எனும் நிலையில், 50 குவாரிகளுக்கு குத்தகை வழங்குவதிலிருந்தே திமுக அரசு கிடைத்தவரை சுருட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு.

PREV
15
50 குவாரிகளுக்கு உரிமம் வழங்க முடிவு

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாட்டில் உரிமம் பெற்று 1845 கருங்கல் குவாரிகள், சட்டவிரோதமாக 2000க்கும் மேற்பட்ட குவாரிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்குவாரிகள் அனைத்திலுமே விதிகளை மீறி கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தான் கூடுதலாக 50 குவாரிகளுக்கு உரிமம் வழங்க திமுக அரசு முடிவு செய்துள்ளது.

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இந்த குவாரிகள் அமைக்கப்படவுள்ளன. இந்த குவாரிகளுக்கு குத்தகை உரிமம் வழங்குவதற்கான ஏல ஒப்பந்த அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். முடிந்தவரை தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே குத்தகை வழங்குவதற்கான நடைமுறைகளை முடிக்க திமுக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் ஆகியவற்றை மட்டுமே கொள்கையாகக் கொண்ட திமுக அரசு இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதில் எந்த வியப்பும் இல்லை.

25
ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் கோடி

ஆட்சிக்காலத்தின் கடைசி கட்டத்தில் இருக்கும் எந்த அரசும் இவ்வளவுக் கொள்ளை அடித்ததில்லை என்று கூறும் அளவுக்கு திமுக அரசு கடைசி நேரக் கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய ஊழல்கள் என்றால், அது ஆற்று மணல் கொள்ளையும், இயற்கை வளக் கொள்ளையும் தான். இந்தக் கொள்ளைகளில் ஆண்டு மதிப்பு ரூ.80 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. மக்கள் நலனிலும், நேர்மையான நிர்வாகத்திலும் திமுக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், இயற்கைவளக் கொள்ளைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை திமுக செய்யவில்லை.

35
கனிமங்களுக்கு ராயல்டி தொகை

மாறாக, கனிமவளக் கொள்ளையர்களின் கனிமக் கொள்ளைக்கு துணை போகும் வகையில் பாவ மன்னிப்பு வழங்கும் திட்டத்தை திமுக அரசு அண்மையில் செயல்படுத்தியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உரிமம் பெற்ற குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கொள்ளையடிக்கப்பட்ட கனிமங்களுக்கு ராயல்டி தொகையாக டன்னுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு, அத்துடன் இரு மடங்கு தொகையை சேர்த்து, அதாவது மொத்தமாக ஒரு டன்னுக்கு ரூ.75 செலுத்தி விட்டால் கனிமக் கொள்ளையர்கள் மன்னிக்கப்படுவர். உரிமம் பெறாத குவாரிகளில் கனிமக் கொள்ளை நடத்தியவர்கள் ராயல்டி தொகையுடன் 5 மடங்கு அபராதம் சேர்த்து ரூ.150 செலுத்தி விட்டால் அவர்கள் பாவ விமோசனம் பெற்று உத்தமர்களாகி விடுவார்கள். அதுவும் கூட அவர்கள் அந்த அபராதத் தொகையை ஒரே தவணையாகக் கூட செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. அதிகபட்சமாக 24 மாதங்களுக்குள் அபராதத்தை செலுத்தினால் போதுமானது. இதை விட மோசமாக எந்த அரசாலும் கனிமவளக் கொள்ளையர்களுக்கு துணை போகவே முடியாது.

45
திமுக உறுப்பினரின் குவாரிகள்

இன்னொரு பக்கம் திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவருக்கு சொந்தமான கல் குவாரிகளில் சட்டவிரோதமாக நடத்தப்படும் கனிமக் கொள்ளைகளை படம் பிடித்த ஊடகவியலாளர்கள் கடத்திச் செல்லப் பட்டு சிறை வைக்கப்படுகிறார்கள். அவர்களை ஆளும் திமுக சட்டமன்ற உறுப்பினரே கொடூரமாகத் தாக்குகிறார். அது குறித்த காணொலி ஆதாரம் வெளிவந்த பிறகும் கூட அந்த சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்படவில்லை. பா.ம.க.வும் பிற எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்த பிறகு தான் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது பெயரளவில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் அதை விட கடுமையான பிரிவுகளில், கனிமக் கொள்ளையை படம் பிடித்து வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படி தொடர்ச்சியாக கனிமக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திமுக அரசு, இப்போது கனிமக் கொள்ளையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தான் 50 புதிய கல்குவாரிகளுக்கு குத்தகை உரிமம் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை செயல்பாட்டில் உள்ள கல்குவாரிகளில் பெரும்பாலானவை தனியார் பட்டா நிலங்களில் அமைந்திருக்கும் நிலையில், இப்போது உரிமம் வழங்கப்படும் குவாரிகள் அரசு புறம்போக்கு நிலங்களில் அமைக்கப்படவுள்ளன. இதன் பின்னணியில் பலநூறு கோடி கைமாறியிருப்பதாக கூறப்படுகிறது.

55
கிடைத்தவரை சுருட்டுவது

கடைசி நேரத்தில் அனைத்துத் துறைகளிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளை வழங்குவது, அரசுத் துறைகளில் பணம் இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தி இப்போதே ஒப்பந்தம் வழங்குவது, அவ்வாறு வழங்கப்படும் ஒப்பந்தங்களில் பல ஆயிரம் கோடி ஊழல் செய்வது போன்றவற்றில் திமுக ஈடுபட்டிருப்பதற்கு அண்மைக்காலங்களில் ஏராளமான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. அந்த முயற்சிகளில் அடுத்தக் கட்டம் தான் இந்த ஏலம் ஆகும்.

ஆளில்லாத வீட்டில் கிடைத்தவரை சுருட்டுவதைப் போலத் தான் திமுக அரசு கடைசி நேர ஊழல்களிலும், கொள்ளையிலும் ஈடுபட்டு வருகிறது. இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கனிமக் கொள்ளை திமுக அரசை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிப்பார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories