Published : Sep 15, 2024, 01:20 PM ISTUpdated : Sep 15, 2024, 07:21 PM IST
Tamils Trapped in Uttarakhand Landslide: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிதம்பரத்தைச் சேர்ந்த 30 தமிழர்கள் சிக்கியுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு உத்தரகாண்ட் அரசுடன் தொடர்பில் உள்ளது.
நாடு முழுவதும் இருந்து உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் சென்று வருவது வழக்கம். அதன்படி தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 30 பேர் உத்தராகண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் யாத்திரைக்கு கடந்த 1ம் தேதி சென்றனர். பின்னர் சாமியை பார்த்துவிட்டு ஊர் திரும்பி வர இருந்த நிலையில் தவாகாட்- தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீரென பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், சாலை வசதிகள் இல்லாமல் தமிழகத்தை சேர்ந்த 30 பேர் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து நிலச்சரிவால் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் போலீசார் மற்றும் தேதசிய மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
24
Tamils Trapped
இதுதொடர்பாக ரவிசங்கர் வசந்தா தம்பதியின் சிதம்பரத்தில் உள்ள தங்கள் மகனுக்கு செல்போன் மூலமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என தெரிவித்து தங்கள் செல்போனில் பதிவான வீடியோவை அனுப்பியுள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்ய செந்தில்குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனடியாக தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
34
Cuddalore District Collector
அதன்படி உத்தரகாண்ட் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி தமிழர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியரும் கேட்டுக்கொண்ட நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பித்தரோகர் மாவட்ட ஆட்சியர் சிக்கிய 30 தமிழர்களின் நிலை குறித்து விவரித்துள்ளார். பின்னர் ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலமாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
44
landslide
இதனையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை மார்க்கமாக மீட்பு பணிகள் தடைபட்டுள்ளது. அதே வேளையில் தமிழர்கள் இருக்கக்கூடிய பகுதிக்கு அருகில் ஹெலிபேட் இருப்பதால் ஹெலிகாப்டர் மூலம் மூலம் தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலச்சரிவால் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்பதால், அவர்களை பத்திரமாக மீட்டு தமிழகத்திற்கு அழைத்துவரும்படி உறவினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.