இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, நிர்வாக ஒப்புதல் வழங்கிய தமிழக அரசு, தமிழ்நாடு பருவகால மாற்ற திட்ட நிதியில் இருந்து இந்த விருதுக்கான நிதியை வழங்கும் வகையில், கருத்துரு அனுப்பும்படி, சுற்றுச்சூழல் மற்றும் பருவகால மாற்றத்துறை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் விருதுத் தொகை ரூ.1 கோடி, நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழுக்காக ரூ.2 லட்சம், நிகழ்ச்சிக்காக ரூ.6 லட்சம், இதர செலவாக ரூ.2 லட்சம் என ரூ.1.10 கோடியை வழங்கும்படி கருத்துரு அனுப்பினார். இந்த கருத்துருவை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, மாவட்டம் தோறும் ஒருவர் என 38 மாவட்டத்துக்கு 38 பேருக்கு விருது வழங்கும் வகையில், ரூ.38 லட்சம் மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.4 லட்சம் என ரூ.42 லட்சத்தை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.