2 வருசம் ஒன்னா சுத்திட்டு இப்ப ஆள மாத்துறியா? காதலனுடன் சேர்த்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட கல்லூரி மாணவி

First Published May 10, 2024, 11:53 AM IST

2 வருடமாக ஒன்றாக பழகிய காதலன் திடீரென வேறொரு பெண்ணை காதலிக்கத் தொடங்கியதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவி காதலனுடன் சேர்த்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ் (வயது 24). இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா மயிலாடுதுறை அரசு  மகளிர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் பயின்று வருகிறார். 

இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவரிடம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஆகாஷ், சிந்துஜா ஆகிய இருவரும் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மயிலாடுதுறைக்கு பல்சர் இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளனர். 

அப்போது ஆகாஷ் பழகி வரும் பெண்ணிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளகூடாது என்று சிந்துஜா கூறியதற்கு ஆகாஷ் மறுப்பு தொவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிந்துஜா மயிலாடுதுறை பாலக்கரை அருகே வந்தபோது தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போதே ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார். 

வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த ஆகாஷ் உடனடியாக இறங்கி ஓட முடியாததால் இருவரும் பலத்த தீ காயங்களுடன் கீழே விழுந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆகாஷ் 60 சதவிகிதமும், சிந்துஜா 40 சதவிகிதமும் காயம் அடைந்ததால் இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இருவரிடமும்  மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றதை  அடுத்து இருவரும் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

click me!