உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் அற்புதக் காட்சிகள் அமைந்துள்ளது. மேலும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி நடைபாலத்தை சுற்றுலாப் படகில் சென்று நேரில் கண்டு ரசிக்கவும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். வார விடுமுறை தினத்தில் கூட்டம் அலைமோதும். தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் இந்த படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படகு பயணத்திற்கு சாதாரண கட்டணம், சிறப்பு நுழைவு கட்டணம் என இரு வகை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் குமரியில் இருந்து திருவள்ளுவர் சிலையை சென்று காணும் வகையில் மூன்று புதிய பயணிகள் படகுகள் கொண்டு வரப்பட உள்ளது.
24
படகு சவாரி வசதிகள்
இந்நிலையில் கடந்த டிசம்பர் 30ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் “முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் இருந்து அய்யன் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்குச் சுற்றுலாப் பயணிகள் எளிதாக சென்றடையும் வகையில், படகு சவாரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மூன்று புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும்” என அறிவித்தார். இந்த மூன்று படகுகளுக்கும் பெருந்தலைவர் காமராசர், மார்சல் நேசமணி, ஜி.யு. போப் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படும் என்றும், முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.
34
கோவாவில் கப்பல் கட்டும் தளம்
தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் நிதியில் மூன்று புதிய பயணிகள் படகுகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கோவா கப்பல் கட்டும் தளத்திற்குச் சென்று அங்கு நடைபெற்று வரும் (Synergy Shipyard, Goa) படகு கட்டுமானப் பணிகளை களஆய்வு செய்தார்கள்.
முதலாவதாக, பெருந்தலைவர் காமராசர் பெயரிடப்பட்ட பயணியர் படகு கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் இதற்கான வெள்ளோட்டம் மற்றும் சோதனை ஓட்டம் (Sea Trial) நடைபெற இருக்கிறது. 2026 பிப்ரவரி மாத இறுதிக்குள் கன்னியாகுமரி துறைமுகத்தில், தமிழ்நாடு கடல்சார் வாரியத்திடம் பெருந்தலைவர் காமராசர் பெயரிட்ட முதல் பயணியர் படகினை ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
மீதமுள்ள “மார்சல் நேசமணி, ஜி.யு.போப்“ ஆகிய இரண்டு படகு கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்துதருமாறு கட்டுமான நிறுவன அலுவலர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.