உலகப் புகழ்பெற்ற பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், பக்தர்கள் மலைக்குச் செல்ல உதவும் ரோப்கார் சேவை மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கிருத்திகை, கந்த சஷ்டி, வைகாசி விசாகம் உள்ளிட்டவை விசேஷ நாட்களாகும். இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மனம் முகந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.
25
உலக புகழ் பெற்ற பஞ்சாமிர்தம்
அதுவும் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் முருகனை தரிசனம் செய்யவே கிட்டத்தட்ட பல மணிநேரம் ஆகிவிடும். மேலும் பழனி முருகன் கோயிலில் மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால் உலக புகழ் பெற்ற பஞ்சாமிர்தம்.
35
ரோப் கார் சேவை
இந்நிலையில் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர வயதானவர்கள் மற்றும் சிறுவர்கள், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளவர்கள் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் 3 நிமிடத்தில் செல்வது மட்டுமல்லாமல் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால் அதிகளவில் ரோப் காரில் செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
பழனி ரோப்கார் சேவையானது காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படுவதால் பலமாக காற்று வீசுமபோது சேவை நிறுத்தப்படும். அதேபோல் பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம்.
55
இன்று ரோப்கார் சேவை இயங்காது
இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒருநாள் மட்டும் ரோப்கார் சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பக்தர்கள் மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி முருகனை சாமி தரிசனம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.