Sachin Tendulkar Meets Vinod Kambli: வினோத் காம்ப்ளியை சச்சின் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் இருவருக்கும் இடையிலான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் வரும் சச்சின், கிரிக்கெட்டில் எந்த ஒரு சாதனையையும் விட்டு வைக்கவில்லை. சச்சின் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அவரது திறமை மற்றும் அர்ப்பணிப்பு என்று நாம் கண்ணைமூடிக் கொண்டு சொல்லலாம்.
இது மட்டுமா? சச்சின் உலக அரங்கில் உயர்ந்து நிற்க மறைமுகமாய் இருந்தவர் அவரது பால்ய நண்பர் வினோத் காம்ப்ளி. வினோத் காம்ப்ளியின் பெயரை அறியாத 80 கிட்ஸ்கள் மற்றும் 90 கிட்ஸ்கள் இருக்க முடியாது. ஆம்.. சிறு வயதில் இருந்தே சச்சினின் உற்ற நண்பனாக வினோத் காம்ப்ளி விளங்கி வந்தார். இருவரும் தங்களின் பள்ளி பருவத்தில் ஒன்றாக கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கினார்கள்.
24
Sachin Tendulkar meets Vinod Kambli
சச்சினைபோலவே இந்தியாவின் முதல் தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடி தேசிய அணிக்கு தகுதி பெற்றவர் வினோத் காம்ப்ளி. சர்வதேச கிரிக்கெடில் சச்சின் கூட தொடக்கத்தில் சொதப்பினாலும், முதல் 7 டெஸ்ட் போட்டிகளிலுக்குள் இரண்டு இரட்டை சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் வாய்பிளக்க வைத்தார் வினோத் காம்ப்ளி.
பின்னர் சச்சின் தனது ஆட்டத்திறனால் இந்திய கிரிக்கெட்டில் இமயமாய் உயர்ந்து நிற்க, சரியா விளையாடாததாலும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியும் கிரிக்கெடில் சிறு குன்றாய் முடங்கிப் போனார் வினோத் காம்ப்ளி. 2008ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வினோத் காம்ப்ளி 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1084 ரன்களும், 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2477 ரன்களும் அடித்துள்ளார்.
சச்சின், வினோத் காம்ப்ளி ஆகிய இருவரும் தங்களது பள்ளிப்பருவ நட்பை இன்றளவும் தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த வினோத் காம்ப்ளி, ''சச்சின் தனக்கு ஆதரவாக இல்லை'' என்று கூறியிருந்தார். இதனால் கொதிப்படைந்த நெட்டிசன்கள், ''உலகப்புகழ்பெற்ற கோடி, கோடியாக பணம் வைத்திருக்கும் சச்சின், பால்ய நண்பனுக்கு இப்படி துரோகம் செய்யலாமா'' என்று கூறி வறுத்தெடுத்தனர். மேலும் சச்சின் சுயநலவாதி என்றும் கடுமையாக வசைபாடினார்கள்.
இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக தனது பால்ய நண்பன் வினோத் காம்ப்ளியை கட்டிப்பிடித்து உருகியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். சச்சின் மற்றும் வினோத் காம்ப்ளியின் சிறுவயது பயிற்சியாளரான மறைந்த ரமாகாண்ட் அச்ரேக்கரை போற்றும் வகையில் மும்பையில் அவருக்கு நினைவுச் சின்னம் திறக்கப்பட்டுள்ளது.
44
Sachin Tendulkar and Vinod Kambli
இந்த விழாவில் சச்சின் கலந்து கொண்டார். இதேபோல் வினோத் காம்ப்ளியும் விழாவில் பங்கேற்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து விழா மேடையில் வினோத் காம்ப்ளி அமர்ந்திருக்க, சச்சின் அங்கு சென்று காம்ப்ளியிடம் சிரித்த முகத்துடன் பேசினார்.
அப்போது காம்ப்ளியின் கைகளை இறுக்கப்பற்றிக் கொண்ட சச்சின், அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். சச்சினின் நலம் விசாரிப்பால் காம்ப்ளி நெகிழ்ச்சி அடைந்தார். சச்சின் காம்ப்ளியிடம் நலம் விசாரிக்கும் வீடியோ, புகைபடங்கள் இனையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த சந்திப்பின்மூலம் சச்சின், காம்ப்ளி இடையிலான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.