மகளின் ஆர்வத்தை அறிந்த பெற்றோர் தங்கள் சம்பாதிக்கும் சொற்ப ஊதியத்தையும் வைத்து கார்த்திகாவை ஒரு கிளப்பில் பயிற்சி பெற சேர்த்து விட்டு ஊக்குவித்தனர். அங்கு பயிற்சியாளரின் உதவியுடனும், தனது கடின உழைப்பு மற்றும் ஆர்வத்துடனும் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளில் அசத்திய கார்த்திகா, இந்திய இளையோர் அணியிலும் இடம்பிடித்து தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணி தங்கம் வெல்ல முக்கிய பங்கு வகித்துள்ளார்.
கண்ணகி நகர் மீதான பார்வையை மாற்றிய கார்த்திகா
கார்த்திகா இப்போது கண்ணகி நகர் அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். 11ம் வகுப்பு படித்து வரும் இவரது தங்கை காவியாவும் கபடி வீராங்கனை தான். பொதுவாக சென்னையில் கண்ணகி நகர் என்றாலே குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அதிகம், போதைப்பொருள் நடமாட்டம் இருக்கும் பகுதியாக பெரும்பாலான சினிமாக்களில் காட்டப்பட்டுள்ளது.
சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் கண்ணகி நகர் என்றால் அப்படி தான் இருக்கும் என்பது போன்ற விஷமத்தனமான கருத்துகள் ஒரு சிலர் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது தனது வெற்றியின்மூலம் கண்ணகி நகர் மீதான ஒரு சிலரின் பார்வையையே அடியோடு மாற்றியுள்ளார் தங்க மங்கை கார்த்திகா.