இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷாரா, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 தொடரில் பங்கேற்க தனக்கு தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்க மறுத்த இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் (SLC) மீது கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியில் இடம்பெற்றுள்ள துஷாரா, கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியத்துடனான தனது ஒப்பந்தம் மார்ச் 31, 2026 அன்று முடிவடைந்துவிட்டதாகவும், அதனால் NOC கேட்பது நியாயமற்றது என்றும், இது தனது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் செயல் என்றும் அவர் வாதிடுவதாக ESPNcricinfo செய்திகள் தெரிவிக்கின்றன.
NOC வழங்காத இலங்கை வாரியம்
இந்த வழக்கில், SLC தலைவர் ஷம்மி சில்வா, செயலாளர் பந்துல திஸநாயக்க, பொருளாளர் சுஜீவ கொடலியத்த மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஆகியோரை பிரதிவாதிகளாக துஷாரா சேர்த்துள்ளார். ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு, இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 9-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியம் புதிதாக அறிமுகப்படுத்திய ஃபிட்னஸ் தகுதித் தேர்வில் துஷாரா தேர்ச்சி பெறாததால், அவருக்கு NOC வழங்கப்படாது என்று மார்ச் 24-ம் தேதியே SLC அவரிடம் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி, 2 கி.மீ ஓட்டம், 20 மீட்டர் ஸ்பிரிண்ட், 5-0-5 சுறுசுறுப்பு சோதனை, ஸ்கின்ஃபோல்ட் அளவீடு மற்றும் கவுன்ட்டர்-மூவ்மென்ட் ஜம்ப் போன்ற சோதனைகளில் தேர்ச்சி பெற்று, குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே வீரர்கள் தகுதி பெறுவார்கள்.
ஐசிசி விதிகள் என்ன?
ஆனால், இதற்கு முன்பு NOC வழங்குவதற்கு இதுபோன்ற ஃபிட்னஸ் சோதனைகள் நிபந்தனையாக இருந்ததில்லை என்றும், இதேபோன்ற ஃபிட்னஸ் நிலையில் இருந்தபோதே கடந்த சீசன்களில் தனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் துஷாரா வாதிடுகிறார். ஐசிசி விதிகளின்படி, வெளிநாட்டு லீக்குகளில் விளையாட வீரர்கள் தங்கள் நாட்டு வாரியத்திடம் NOC பெற வேண்டும்.
ஆனால், அந்தச் சான்றிதழை வழங்குவதற்கான தகுதிகளை அந்தந்த நாட்டு வாரியங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என ICC கூறியுள்ளது. இதனால், வாரியத்தின் ஒப்பந்தத்தில் இல்லாத வீரர்கள் விஷயத்தில் ஒருவித குழப்பமான சூழல் நிலவுகிறது.
ஆர்சிபி அணியில் நுவன் துஷாரா
ஐபிஎல் தொடர் மார்ச் 28-ம் தேதியே தொடங்கிவிட்ட நிலையில், இந்த சட்டப் போராட்டத்தால் துஷாரா அடுத்த சில வாரங்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
RCB அணிதான் கடந்த ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியன். 2025 சீசனில் RCB அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய துஷாரா, 1 விக்கெட்டை வீழ்த்தினார்.