
ருதுராஜ் கெய்க்வாட் காயம்
MS Dhoni Become CSK Captain : ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக ஐபிஎல் 2025 தொடரில் இருந்து விலகியதால், அனுபவ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம்.எஸ். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்கிறார். அசாமில் உள்ள பார்சபரா மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும், சிஎஸ்கே கேப்டன் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் விளையாடினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டிக்கு தோனி கேப்டன்
இந்த போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது. இதையடுத்து நாளை சொந்த மைதானத்தில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார் என்றும், எம்.எஸ். தோனி மீதமுள்ள சீசனுக்கு அணியை வழிநடத்துவார் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உறுதிப்படுத்தினார்.
ஐபிஎல் 2025 – சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி
கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று 3ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 155/9 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.1 ஆவது ஓவரில் 158/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தோல்வி:
முதல் போட்டியின் வெற்றிக்கு பிறகு ஹோம் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஆர்சிபி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தோனி அஸ்வினுக்கு பிறகு களமிறங்கிய நிலையில் விமர்சனத்தை எதிர்கொண்டார்.
கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கவுகாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 7ஆவது வரிசையில் களமிறங்கிய தோனி சரிவர விளையாடவில்லை என்று அவர் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.
ஹோம் மைதானத்தில் டெல்லியிடம் தோல்வி:
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் விஜய் சங்கர் மற்றும் எம் எஸ் தோனி இருவரும் சிக்ஸரும், பவுண்டரியும் அடிக்காமல் சிங்கிள்ஸாக எடுத்து விளையாடியதால் இருவரும் விமர்சனத்திற்கு உள்ளாகினர். தோனிக்கு வயதாகிவிட்டது. அவரை ஓய்வு பெறச் செய்து அவருக்கு பதிலாக இளம் வீரரை அணியில் இடம் பெற செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்தனர்.
சண்டிகரில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வி:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தனது 5ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஜெயிக்க வேண்டிய இந்தப் போட்டியில் தோனி 5ஆவது வீரராக களமிறங்கி 12 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடி கொண்டிருந்த டெவோன் கான்வேவை ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேற வைத்துவிட்டு அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை சிஎஸ்கே களமிறக்கியது. அப்படி களமிறங்கிய ஜடேஜா வெறும் 5 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதுவும் ரசிகர்களிடையே சர்ச்சையையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.
சிஎஸ்கே 5 போட்டியில் 4 தோல்வி:
ஐபிஎல் 2025 தொடரில் சிஎஸ்கே விளையாடிய 5 போட்டிகளில் அடுத்தடுத்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்து ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகியிருக்கிறது. மேலும் சிஎஸ்கே மீது ரசிகர்கள் விரக்தியில் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி சிஎஸ்கே ரசிகர்களும் இப்போது ஆர்சிபிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸி விமர்சனம்:
சிஎஸ்கே விளையாடிய சில போட்டிகளில் பேட்டிங்க் மட்டுமின்றி பவுலிங்க் மற்றும் பீல்டிங் என்று எல்லாவற்றிலும் சொதப்பிய நிலையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டதோடு அவரது கேப்டன்ஸீ மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இதன் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலேயே தோனி கேப்டனாக செயல்பட இருந்த நிலையில் அந்தப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டார். இதே போன்று பஞ்சாப் கிங்ஸ் போட்டியிலும் கேப்டனாக களமிறங்கினார்.
மீண்டும் கேப்டனாகும் தோனி:
இந்த நிலையில் தான் காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் எஞ்சிய 9 போட்டிகளிலிருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக எஞ்சிய தொடர் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம் எஸ் தோனி செயல்படுவார் என்று தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் அறிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டை நினைவுபடுத்தும் சிஎஸ்கே:
இதே போன்று தான் கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடைபெற்றது. இந்த தொடரில் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்பட்டார். ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி 10 தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.
2022ல் ரவீந்திர ஜடேஜா கேப்டன்
ஐபிஎல் 2022 தொடரில் சிஎஸ்கே வரிசையாக 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. 5ஆவது போட்டியில் வெற்றி பெற்றது. 6ஆவது போட்டியில் தோல்வி, 7ஆவது போட்டியில் வெற்றி, 8ஆவது தோல்வி, 9ஆவது போட்டியில் வெற்றி, 10ஆவது போட்டியில் தோல்வி, 11ஆவது போட்டியில் வெற்றி, கடைசி 3 போட்டிகளில் தோல்வி என்று மொத்தம் 4 போட்டிகளில் வெற்றி கண்டது.
இந்த தொடரில் முதல் 8 போட்டிகளுக்கு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக இருந்த நிலையில் மோசமான தோல்வி காரணமாக எஞ்சிய போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜடேஜா விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக எஞ்சிய 4 போட்டிகளுக்கு தோனி கேப்டனாக செயல்பட்டார். இப்போது மீண்டும் இதே போன்ற ஒரு நிலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 5 போட்டிகளில் 4 தோல்வி ஒரு வெற்றி என்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. எஞ்சிய 9 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது எல்லா போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 10 போட்டிகளில் வெற்றி என்ற கணக்கில் மொத்தமாக 20 புள்ளிகள் கிடைக்கும்.
மேலும் மற்ற அணிகள் 10 போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்றால் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். எஞ்சிய 9 போட்டிகளில் 8 வெற்றி கிடைத்தால் 18 புள்ளிகள் கிடைக்கும்.
7 போட்டிகளில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் கிடைக்கும்.
6 போட்டிகளில் வெற்றி என்றால் 14 புள்ளிகள் கிடைக்கும்.
5 போட்டிகளில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் கிடைக்கும்.
அதன் பிறகு பிளே ஆஃப் வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பில்லை. கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முறையே புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருந்த குஜராத் டைட்டன்ஸ் 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகள் பெற்றிருந்தது. கடந்த சீசனில் கேகேஆர் 9 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.
ஆனால், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது என்பது சற்று சவாலான ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு காரணமாக விளையாடிய 5 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி மட்டுமே கிடைத்திருக்கிறது.