
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது. இதுவரையில், விளையாடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது.
இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஒரு ரன்னில் தோல்வி அடைந்து தொடர்ந்து 6ஆவது போட்டியில் தோல்வியை தழுவியது. மேலும், விளையாடிய 8 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வியை தழுவியது நிலையில் பிளே ஆஃப் வாய்ப்பையு கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 36ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கேகேஆர் அணியில் பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஆரம்பத்திலேயே தடுமாறிய சுனில் நரைனுக்கு யாஷ் தயாள் யார்க்கரில் காலை பதம் பார்த்துவிட்டார். அதன் பிறகு 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அங்கிரிஸ் ரகுவன்ஷி 3 ரன்களில் நடையை கட்டினார்.
போட்டியின் 4ஆவது ஓவரை லாக்கி பெர்குசன் வீசினார். இந்த ஓவரில் பிலிப் சால்ட் 6, 4, 4, 6, 4, 4 என்று மொத்தமாக 28 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக கேகேஆர் 4 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்தது. ஆனால், அடுத்த ஓவரிலேயே பிலிப் சால்ட் ஆட்டமிழந்தார். அவர் 14 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 48 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து வந்த வெங்கடேஷ் ஐயர் 17 ரன்னிலும், ரிங்கு சிங் 24 ரன்னிலும் நடையை கட்டினர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தன் பங்கிற்கு பொறுப்பை உணர்ந்து விளையாடி ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 20 ஆவது அரைசதத்தை அடித்தார். அவர் 36 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஆண்ட்ரே ரஸல் மற்றும் ரமன் தீப் சிங் கடைசியில் இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக கேகேஆர் 200 ரன்களை கடந்தது. கடைசி ஓவரை யாஷ் தயாள் சிறப்பாக வீசியதால், அந்த ஓவரில் 16 ரன்கள் எடுக்கப்பட்டது. இறுதியாக கேகேஆர் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது. ரமன் தீப் சிங் 9 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 24 ரன்னும், ஆண்ட்ரே ரஸல் 20 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 27 ரன்னும் எடுத்தனர்.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆர்சிபி அணியில் யாஷ் தயாள் மற்றும் கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் லாக்கி பெர்குசன் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஆனால், இதுவரையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி 204 ரன்களை மட்டுமே அதிகபட்சமாக சேஸ் செய்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 204 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கடின இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி நல்ல தொடக்கம் கொடுத்த போதிலும் அவர் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 18 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்ஷித் ராணா வீசிய புல்டாஸ் பந்தில் ஆட்டமிழந்து நோபால் கேட்டார். ஆனால், ரெவியூவில் பந்து ஸ்டெம்பிற்கு மேல் சென்ற நிலையில் அவுட் உறுதி செய்யப்பட்டது. இவரைத் தொடர்ந்து ஃபாப் டூப்ளெசிஸ் 7 ரன்னில் வெளியேறினார்.
அதன் பிறகு வில் ஜாக்ஸ் மற்றும் ரஜத் படிதார் இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், இருவருமே மாறி மாறி அரைசதம் அடித்தனர். வில் ஜாக்ஸ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 55 ரன்னில் ஆட்டமிழக்க, ரஜத் படிதாரும் 23 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 52 ரன்னில் நடையை கட்டினார்.
கேமரூன் க்ரீன் 6, மஹிபால் லோம்ரார் 4 ரன்னிலும், சுயாஷ் பிரபுதேசாய் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நம்பிக்கை நட்சத்திரமான தினேஷ் கார்த்திக் தன் பங்கிற்கு 18 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 25 ரன்கள் எடுத்தார்.
எனினும் கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கரண் சர்மா களத்தில் இருந்தார். கடைசி ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் சென்றது. 3ஆவது மற்றும் 4ஆவது பந்திலேயும் கரண் சர்மா சிக்ஸர் அடித்தார்.
இதன் மூலமாக ஆர்சிபி வெற்றியை நெருங்கியது, கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 4ஆவது பந்தில் கரண் சர்மா ஆட்டமிழந்தார். கடைசியாக லாக்கி பெர்குசன் களமிறங்கினார். 2 ரன் எடுத்தால் சூப்பர் ஓவர், ஒரு ரன் எடுத்தால் கேகேஆர் வெற்றி, 3 ரன் எடுத்தால் ஆர்சிபி வெற்றி என்ற நிலை இருந்தது.
ஆனால், அவர், ஆஃப் சைடு திசையில் அடித்து விட்டு 2 ரன்கள் எடுக்க ஓடினார். ஆனால், ரமன்தீப் சிங் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் த்ரோ செய்யவே, அவரும் பந்தை பிடித்து ஸ்பைடர் மேன் மாதிரி டைவ் அடித்து ஸ்டெம்பில் ஸ்டெமிங் செய்வது போன்று ரன் அவுட் செய்தார்.
இதன் மூலமாக ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இறுதியாக ஆர்சிபி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன்னில் தோல்வியை தழுவியது.
இதன் மூலமாக கேகேஆர் த்ரில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5 வெற்றிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியது. 2ஆவது இடத்திலிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3ஆவது இடத்திற்கு சென்றது. ஆர்சிபி விளையாடிய 8 போட்டிகளில் 7 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
மேலும், பிளே ஆஃப் வாய்ப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. எஞ்சிய 6 போட்டிகளில் ஜெயித்தால் கூட 14 புள்ளிகள் பெறும். ஆனாலும், மற்ற அணிகளின் புள்ளிகள் மற்றும் நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி பிளே ஆஃப் வாய்ப்பு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.