
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், இந்த மூன்று அணிகளும் பிளேஆஃப் இடத்தை உறுதி செய்துவிட்டன. லீக் சுற்றில் இன்னும் மூன்று போட்டிகளே மீதமிருக்கும் நிலையில், கடைசி ஒரு இடத்திற்கு நான்கு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள்தான் அந்தப் போட்டியில் இருக்கின்றன. இந்த சூப்பர் சண்டே அன்று யாருக்கு பிளே ஆஃப் சான்ஸ் கிடைக்கப்போகிறது என்பது தெரிந்துவிடும்.
இந்த நான்கு அணிகளில், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத்தான் பிளேஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அவர்கள் 13 போட்டிகளில் 14 புள்ளிகளுடன், +0.083 என்ற நெட் ரன் ரேட்டில் இருக்கிறார்கள். அவர்களின் கடைசி போட்டி, புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடக்கிறது. மற்ற அணிகளின் முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் பிளேஆஃப் செல்லக்கூடிய ஒரே அணி ராஜஸ்தான்தான். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில் மும்பையைத் தோற்கடித்தால் போதும், 16 புள்ளிகளுடன் நேரடியாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடுவார்கள்.
ஒருவேளை மும்பையிடம் தோற்றுவிட்டால் என்ன ஆகும்? அப்போதும் ராஜஸ்தானுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் தங்களது கடைசிப் போட்டிகளில் ஜெயிக்கக்கூடாது. அப்படி நடந்தால், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் 13 புள்ளிகளுடன் தொடரை விட்டு வெளியேறும். கொல்கத்தாவின் கடைசிப் போட்டி, பிளேஆஃப் போட்டியில் இருக்கும் டெல்லிக்கு எதிராக நடக்கிறது. இதில் டெல்லி ஜெய்த்தால், ராஜஸ்தானுடன் அவர்களும் 14 புள்ளிகளைப் பெறுவார்கள். ஆனால், நெட் ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணிக்கு சாதகமாக அமையும்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இது வாழ்வா சாவா போட்டி. இந்த முறை வெளியேறினால், அது அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும். முதல் ஏழு போட்டிகளில் ஆறில் வென்ற அவர்கள், அதன்பிறகு தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறார்கள். 13 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாபின் நெட் ரன் ரேட் +0.227 ஆகும். தங்களது கடைசிப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை வீழ்த்தினால், பிளேஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
ஆனால், அதோடு ராஜஸ்தான் அணி மும்பையிடமும், கொல்கத்தா அணி டெல்லியிடமும் தோற்க வேண்டும். ஒருவேளை பஞ்சாப்புடன் கொல்கத்தாவும் ஜெய்துவிட்டால், நெட் ரன் ரேட்தான் முடிவை தீர்மானிக்கும். உதாரணமாக, பஞ்சாப் அணி லக்னோவை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால், கொல்கத்தா அணி 65 ரன்களுக்கும் குறைவான வித்தியாசத்தில்தான் ஜெயிக்க வேண்டும்.
இதே போன்ற நிலையில் தான் கொல்கத்தா அணியும் உள்ளது. அவர்களும் 13 புள்ளிகளுடன், +0.011 என்ற நெட் ரன் ரேட்டில் இருக்கிறார்கள். முன்பே சொன்னது போல, அவர்களின் கடைசிப் போட்டி டெல்லிக்கு எதிராக நடக்கிறது. டெல்லியைத் தோற்கடிப்பது முதல் நிபந்தனை. அதோடு, பஞ்சாப் அணி லக்னோவிடமும், ராஜஸ்தான் அணி மும்பையிடமும் தோற்க வேண்டும். ஒருவேளை பஞ்சாப்பும், கொல்கத்தாவும் ஜெய்து, ராஜஸ்தான் தோற்றால், நெட் ரன் ரேட்தான் கிங் மேக்கராக இருக்கும். அதனால், டெல்லிக்கு எதிராக ஜெய்ப்பதாக இருந்தால், அது பெரிய ரன் வித்தியாசத்தில் இருக்க வேண்டும்.
பிளேஆஃப் போட்டியில் இருக்கும் அணிகளில், டெல்லிக்குத்தான் வாய்ப்பு மிகவும் குறைவு. காரணம், அவர்களின் நெட் ரன் ரேட். 12 புள்ளிகளுடன் இருக்கும் டெல்லியின் நெட் ரன் ரேட் -0.871. அவர்கள் கொல்கத்தாவை எதிர்கொள்கிறார்கள். பஞ்சாப் அணி லக்னோவிடம் தோற்க வேண்டும், மும்பை அணி ராஜஸ்தானை மிகப் பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இவையெல்லாம் நடந்தாலும், டெல்லி அணி கொல்கத்தாவை குறைந்தபட்சம் 200 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். இது கிட்டத்தட்ட நடக்காத காரியம். கணக்குப்படி மட்டுமே வாய்ப்பு இருக்கிறது, ஏதேனும் அதிசயம் நடந்தால் மட்டுமே உண்டு.
ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 1 போட்டியில் பெங்களூரு அணி குஜராத்தை மே 26 அன்று எதிர்கொள்கிறது. எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குவாலிஃபையர் 2 மே 29 அன்றும், இறுதிப் போட்டி மே 31 அன்றும் நடைபெறும்.