
இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 113 ஓவர்களில் 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (101 ரன்), கேப்டன் சுப்மன் கில் (147 ரன்) மற்றும் ரிஷப் பண்ட் (134) ஆகிய 3 பேர் சதம் அடித்தனர். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் டாங்கே 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
பின்பு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. ஆலி போப் 100 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்று இங்கிலாந்து அணி 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய நிலையில், ஆலி போப் 106 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தடுமாற்றத்துடன் ஆடி 20 ரன்னில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
சரிவில் இருந்து மீட்ட ஹாரி ப்ரூக், ஜேமி ஸ்மித்
பின்பு ஜோடி சேர்ந்த ஹாரி ப்ரூக்கும், ஜேமி ஸ்மித்தும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய ஜேமி ஸ்மித் 52 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்களில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு பிரசித் கிருஷ்ணா பந்தில் பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இங்கிலாந்து அணி 349/6 ரன்கள் எடுத்திருந்தது.
ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் ஹாரி ப்ரூக் சிராஜின் ஓவரில் பவுண்டரிகளாக விளாசினார். 99 ரன்களில் இருந்த அவர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில், அதே 99 ரன்களில் அவுட்டாகி 1 ரன்னில் சதத்தை தவற விட்டார். பிரசித் கிருஷ்ணா பந்தில் சிக்சருக்கு தூக்கி அடித்தபோது அது ஷர்துல் தாக்கூர் கையில் சென்று உட்கார்ந்தது. பின்பு பிரைடன் கார்சும், கிறிஸ் வோக்சும் சிறிது நேரம் அதிரடியாக விளையாடி 450 ரன்களை கடக்க வைத்தனர்.
இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆல் அவுட்
சிறப்பாக விளையாடிய பிரைடன் கார்ஸ் (22 ரன்) சிராஜ் பந்தில் கேட்ச் ஆனார். இறுதியில் கிறிஸ் வோக்ஸ் (38 ரன்), ஜோஸ் டாங்கோ (11 ரன்) பும்ரா பந்தில் அவுட் ஆனார்கள். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்தியாவை விட 6 ரன்கள் குறைவாக எடுத்தது. இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா 24.4 ஓவர்களில் 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்பு 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 4 ரன்னில் கார்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன சாய் சுதர்சன் களம் புகுந்தார். அவரும், கே.எல்.ராகுல் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சாய் சுதர்சன் நிதானம் காட்ட, கே.எல்.ராகுல் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார்.
மீண்டும் ஏமாற்றிய சாய் சுதர்சன்
சில நல்ல பவுண்டரிகளை அடித்த சாய் சுதர்சன் 30 ரன்கள் எடுத்தபோது பென் ஸ்டோக்ஸ் பந்தில் கிராவ்லியிடம் கேட்சாகி வெளியேறினார். இந்த இன்னிங்சில் குறைந்தது அரை சதமாவது அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாய் சுதர்சன் ஏமாற்றினார். தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. இந்திய அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது.
கே.எல்.ராகுல் 75 பந்தில் 7 பவுண்டரிகளுடன் 47 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் கார்ஸ், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்திய அணி 96 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில், 4வது நாள் ஆட்டத்தில் விக்கெட் இழக்காமல் ஆட வேண்டும். நாளை நாள் முழுவதும் இந்திய அணி பேட்டிங் செய்தால் இந்த டெஸ்ட் டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் பீல்டிங் படுமோசம்
முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. ஜெய்ஸ்வால் மட்டும் 3 கேட்ச்களை தவற விட்டார். ஜடேஜா, பண்ட் ஒரு கேட்ச்களை தவற விட்டனர். இந்த கேட்ச்களை பிடித்து இருந்தால் இங்கிலாந்து அணி 300 ரன்களை கூட தாண்டி இருக்காது. மேலும் பவுண்டரி லைனிலும் சில பவுண்டரிகளை இந்திய வீரர்கள் கோட்டை விட்டனர்.