
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி, மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இந்திய அணியின் பேட்டிங் முடிந்த பிறகு மழை வலுத்ததால், ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது.
ஷ்ரேயாஸ் ஐயர் சூப்பர் பேட்டிங்
கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (47 பந்துகளில் 68 ரன்), அபிஷேக் ஷர்மா (24 பந்துகளில் 59) ரன் மற்றும் ஷிவம் துபே (21 பந்துகளில் 42) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா நல்ல ஸ்கோரை எட்டியது. இங்கிலாந்து தரப்பில் சாகிப் மஹ்மூத் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியாவுக்கு தொடக்கம் மிகவும் மோசமாக இருந்தது.
வெறும் 6 ரன்களுக்குள் சஞ்சு சாம்சன் (1), இஷான் கிஷன் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. அயர்லாந்து தொடரில் சொதப்பிய சஞ்சு, இங்கிலாந்திலும் அதே ஃபார்மை தொடர்ந்தார். தொடக்கம் முதலே தடுமாறிய அவர், தான் சந்தித்த ஏழாவது பந்தில் சாகிப் மஹ்மூத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் இஷான் கிஷன் ரன் அவுட் ஆனார்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயரும், அபிஷேக் ஷர்மாவும் அதிரடியாக ஆடினர். குறிப்பாக அபிஷேக் ஷர்மா பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு, 24 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் குவித்தார். ஷ்ரேயாஸ் உடன் 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பிறகு, சாம் கரன் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். திலக் வர்மா (13) பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும், ஷ்ரேயாஸ் மற்றும் சிவம் துபேவின் ஆட்டம் இந்திய அணிக்கு பெரிதும் உதவியது.
ஒரு சிக்ஸர் மற்றும் ஆறு பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்த கேப்டன் ஷ்ரேயாஸ், 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஹர்ஷித் ராணா (0), அக்சர் படேல் (3) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே 21 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா இங்கிலாந்துக்கு வலுவான ஸ்கோரை இலக்காக நிர்ணயித்த நிலையில், முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா, டி20 சர்வதே போட்டிகளில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதாவது டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையை இந்த இடது கை பேட்ஸ்மேன் படைத்துள்ளார். இந்த போட்டியில் மொத்தம் 4 சிக்சர்களை விளாசிய அபிஷேக் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 100 சிக்சர்களை நொறுக்கியுள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 100 சிக்சர்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
அதாவது அபிஷேக் சர்மா வெறும் 785 பந்துகளிலேயே 100 சிக்சர்களை விளாசி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லூயிஸ் 789 பந்துகளில் 100 சிக்ஸர்களை அடித்திருந்தார். இதன்மூலம் எவின் லூயிஸ் சாதனையை அபிஷேக் முறியடித்துள்ளார். இதன்மூலம், இந்தியாவின் மிக அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக அபிஷேக் சர்மா உருவெடுத்துள்ளார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
இதேபோல் முதல் நேற்றைய போட்டியில் பொறுப்புடன் ஆடி அரை சதம் (47 பந்தில் 68 ரன்கள்) அடித்த இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்தில் நடைபெறும் சர்வதேச டி20 போட்டியில் அரை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். இதற்கு முன்பு எந்த இந்திய கேப்டனும் இங்கிலாந்து டி20யில் அரைசதம் அடித்தது இல்லை. 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கார்டிஃபில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 47 ரன்கள் எடுத்ததே இந்திய கேப்டன் ஒருவர் எடுத்த அதிகப்பட்ச ரன்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.