கோயில்களில் கொடுக்கும் கயிற்றை எத்தனை நாள் கட்டியிருக்க வேண்டும்? அதனால் என்னென்ன பலன்கள்..!

First Published Mar 24, 2023, 1:17 PM IST

கோயில்களில் கொடுக்கும் புனித கயிற்றை எத்தனை நாள்கள் கையில் கட்டியிருக்க வேண்டும்.. அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

பொதுவாக கோயிலுக்கு செல்லும்போது அங்கு வழங்கப்படும் கயிற்றை புனிதமாகக் கருதி கையில் வாங்கி கொண்டு வருவோம். சிலர் ஏதேனும் வேண்டுதல்களை மனதில் நினைத்துக் கொண்டு கையில் கயிறு கட்டிக் கொள்கின்றனர். சிலரோ கெட்ட சக்திகளிடம் இருந்து தங்களை விலக்கி பாதுகாக்க கயிறுகளை பயன்படுத்துகின்றனர். அந்த கயிற்றை எத்தனை நாள் நாம் கையில் கட்டி இருக்க வேண்டும்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். 

காசி, திருப்பதி ஆகிய கோயில்களிலும், பல்வேறு அம்மன் கோயிலிலும் கயிறுகள் கொடுப்பார்கள். பைரவர் கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என்ற வரிசையில் கருப்பு கயிறுகளை பக்தர்கள் கையில் கட்டிக் கொள்கிறார்கள். சிவப்பு, மஞ்சள் கயிறுகளும் கூட கோயில்களில் வழங்குகிறார்கள். எந்த கயிராக இருந்தாலும் குறிப்பிட்ட முடிச்சுகளில் தான் நன்மைகள் பெருகுகின்றன. 

ஆணவம், பொறாமை, ஆசை, ஆரோக்கியம் ஆகியவை கட்டுக்குள் வர கையில் 5 முடிச்சுகள் போட்டு கயிறு கட்டிக் கொள்ளவேண்டும். இதனால் பயம் நீங்கி, தைரியம் வரும். கர்ம வினைகள் ஒழியும். 

கருப்பு கயிறு கட்டுபவர்கள் அதில் 9 முடிச்சுகள் போட வேண்டும். ஒவ்வொரு முடிச்சை போட்டுகொள்ளும் போதும் இஷ்ட தெய்வ நாமத்தை சொல்லலாம். இல்லையென்றால், 'ஒம் நமசிவாய' என்றோ 'ஓம் நமோ நாராயணாய' என்றோ உச்சரிக்க வேண்டும்.  

விபத்துகளில் தற்காக்கும். பில்லி சூனியம் ஏவல் செய்வினை போன்ற தீவினைகளில் இருந்து காத்துக் கொள்ளும். தோஷங்கள் விலகும். நோய்கள் குணமாகும். தீய கனவுகள் ஏற்படாமல் தடுக்கப்படும். பைரவருக்கு கயிறு கட்டிக் கொண்டால் அவருடைய அருள் உங்கள் மீது இருக்கும். 

எந்த கையில் கட்டவேண்டும்?

ஆண்கள் வலது கையில், பெண்கள் இடது கையில் கயிறு கட்டிக் கொள்ளலாம். ஆனால் வரலட்சுமி நோன்பு கயிறை எப்போதும் பெண்கள் வலது கையில் தான் கட்ட வேண்டுமாம். சிலர் கயிறுகளை ஒரு ஆண்டு முழுவதும் கட்டிக் கொள்கிறார்கள். அதனிடையே அதை அவிழ்ப்பதும் கிடையாது. ஆனால் இவ்வாறு செய்யக்கூடாது. நாம் கையில் கட்டும் கயிறுகளுக்கு 48 நாட்கள் மட்டும் தான் அவகாசம். அதன் பிறகு கட்டியிருக்கக் கூடாது. 

கருப்பு கயிறு கையில் கட்டுபவர்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் கட்டி கொள்ளலாம். இது நன்மை தரும். அப்போது கட்டிக் கொள்ளாவிட்டால்,  நண்பகல் 12 மணிக்கு அணியலாம்.  சனிக்கிழமை அன்று இந்த கயிற்றைக் கட்டிக் கொண்டால் இன்னும் விசேஷமாக இருக்கும். 

இதையும் படிங்க; நம்மை பிடிக்காதவர்கள் வைக்கும் பில்லி சூனியம் போன்ற தீய வினைகளிலிருந்து தப்பிக்க, கோமாதா வழிபாடு..!

48 நாட்களுக்குப் பிறகு அந்தக் கயிறை கழற்றி ஓடும் ஆற்றில் அல்லது மற்ற நீர்நிலைகளில் போட வேண்டும். கயிறு யார் காலிலும் படும் வகையில் போடுதல் கூடாது. இப்படி முறையாக கையில் கயிறு கட்டிக் கொண்டால் ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் அரணாக இருக்கும்.  

இதையும் படிங்க: வெள்ளிக்கிழமை இந்த காரியங்கள் செய்தால்.. பணக் கஷ்டம் தீரும், மீறினால் மீள முடியாத கடன் பிரச்சினை வரும்...!

click me!