Tirupati Temple: திருப்பதி போற ஐடியா இருக்கா! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

First Published Oct 17, 2024, 2:12 PM IST

Tirumala Tirupati Devasthanam: திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2025 ஜனவரி மாதம் சாமி தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை அறிவித்துள்ளது. 

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பார்கள். அதற்கு ஏற்ப உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் தரப்பில் விஐபி தரிசனம், சிறப்பு தரிசனம் உள்ளிட்டவைகள் ஆன்லைனில் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே வெளியிடப்படுகிறது.

அந்த வகையில் 2025 ஜனவரி மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 19ம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 21ம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கான மின்னணு டிக்கெட்டுகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் அக்டோபர் 21ம் தேதி முதல் 23ம் தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெறலாம்.  

இதையும் படிங்க: Tirumala Tirupati Temple: கனமழை எச்சரிக்கை அலர்ட்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Latest Videos


அதேபோல் அக்டோபர் 22ம் தேதி காலை 10 மணிக்கு ஜனவரி மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கர சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும். இந்த சேவைக்கு நேரடியாக பங்கேற்காமல் தரிசனம் மட்டும் செய்யும் மெய்நிகர் சேவைக்கு 22ம் தேதி மாலை 3 மணிக்கு டிக்கெட் முன்பதிவு செய்து பெறலாம்.

அக்டோபர் 23ம்  அங்கபிரதட்சனம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் அக்டோபர் 23ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் பெறலாம். ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கான விஐபி தரிசன டிக்கெட் மற்றும் அறைகள் முன்பதிவு டிக்கெட்டுகள் 23ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. 

இதையும் படிங்க:  School Education Department: அக்டோபர் 25-ம் தேதி வரை தான் கெடு! தலைமையாசிரியர்களுக்கு தேர்வுத் துறை உத்தரவு!

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கான டிக்கெட்டுகள் 23ம் தேதி அன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் பெறலாம். ஜனவரி மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசனம் ரூ.300 டிக்கெட்டுகள் அக்டோபர் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் முன்பதிவுக்கான டிக்கெட் 24ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள பக்தர்கள் அறைகள் ஜனவரி மாதத்திற்கு பெற அக்டோபர் 24 அன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இதற்காக தேவஸ்தானத்தின் https://ttdevasthanams.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ  இணையதள பக்கத்தில் மட்டுமே தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!