சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்த கெணத்த காணோம் திரைப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.
யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் கெணத்த காணோம். இப்படத்தை சுரேஷ் சங்கைய்யா இயக்கி உள்ளார். இப்படத்தில் யோகி பாபு உடன் லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரெபேக்கா ராமகிருஷ்ணன், ஜார்ஜ் மரியான் உள்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கும் இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
கெணத்த காணோம் பட கதை
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கைய்யா அவர்களின் இறுதி படைப்பான "கெணத்த காணோம்" ஒரு எளிமையான கிராமத்தின் தண்ணீர் தாகத்தை திரையில் உயிரோட்டமாக சொல்லியிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தின் வறண்ட நிலத்தில் வாழும் மக்களின் தண்ணீர் வேதனையே கதையின் உயிர்நாடி. கோவில் பூசாரியாக வலம் வரும் யோகிபாபு, காதல், குடும்பம், சமூக பிரச்சினை என அனைத்தையும் தன் தோளில் சுமக்கிறார். கிணறு தோண்டும் போது கிடைக்கும் டைனோசர் எலும்பு, கதையில் ஒரு புதிய திருப்பத்தை கொண்டு வருகிறது. அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
34
கெணத்த காணோம் பட விமர்சனம்
தியாகத்தின் உச்சமாக முடியும் தந்தையின் கதாபாத்திரம் நெஞ்சை தொடுகிறது. யோகிபாபு இம்முறை வெறும் காமெடியன் அல்ல உணர்வுள்ள நாயகனாக முழு மெருகுடன் திகழ்கிறார். லவ்லின் சந்திரசேகர் இயல்பான நடிப்பால் கவர்கிறார். ஜார்ஜ் மரியான், ரேச்சல் ரெபேக்கா, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட குழு நடிகர்கள் கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்து நடித்திருக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்தின் உணர்வுகளை இரட்டிப்பாக்குகிறது.
பாடல்களும் பின்னணி இசையும் மனதில் தங்குகின்றன. ஒளிப்பதிவு கிராமத்தின் மண் வாசனையை திரையில் கொண்டுவருகிறது. சுரேஷ் சங்கைய்யா, சமூக உண்மையை சிரிப்பிலும் கண்ணீரிலும் கலந்து சொல்லியிருக்கிறார். இப்படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்துள்ளது யோகிபாபுவின் நடிப்பு தான். அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். யோகிபாபு என்கிற காமெடியனுக்குள் ஒளிந்திருக்கும் நடிப்பு அரக்கனை வெளிச்சம் போட்டு காட்டிய படமாக இந்த கெணத்த காணோம் அமைந்துள்ளது.