
கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் சமமாக கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தும் சமூகக் கருத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'அருள்வான்'. பொழுதுபோக்கை மட்டுமே இலக்காகக் கொள்ளாமல், சமூகத்தில் இன்னும் நிலவி வரும் கல்வி சமத்துவமின்மையை உணர்வுபூர்வமாக திரையில் பதிவு செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர் கணேஷ் விநாயகம். இப்படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இதன் விமர்சனத்தை விரிவாக பார்க்கலாம்.
மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினச் சிறுமி கிருத்திகாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. உயர்கல்வி கற்று சாதிக்க வேண்டும் என்ற உறுதியான கனவு அவளிடம் இருந்தாலும், பள்ளி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அந்தப் பயணம் பல சவால்களை எதிர்கொள்கிறது. அந்தக் குழந்தையின் போராட்டத்தையும், மலைவாழ் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் அறியும் மாவட்ட ஆட்சியர் முத்துவேல், அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார். அந்த முயற்சி வெற்றியடைகிறதா? கிருத்திகாவின் கல்விக் கனவு நனவாகிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
மாவட்ட ஆட்சியர் முத்துவேலாக நடித்துள்ள அருள்நிதி, மிகைப்படுத்தப்படாத நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையை வழங்கியுள்ளார். ஹீரோயிசத்தை விட கதையின் நோக்கத்தையே முன்னிலைப்படுத்தும் அவரது தேர்வு, படத்தின் மையக் கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது. அமைதியான நடிப்பும், அளவான உணர்ச்சி வெளிப்பாடும் அவரது கதாபாத்திரத்திற்கு சிறப்பை சேர்க்கின்றன. பழங்குடியின இளைஞராக நடித்துள்ள ஆரவ், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பது பல காட்சிகளில் வெளிப்படுகிறது. சில இடங்களில் இன்னும் இயல்பாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றினாலும், மொத்தத்தில் திருப்திகரமான நடிப்பை வழங்கியுள்ளார்.
ரம்யா பாண்டியன் குறுகிய நேரமே திரையில் தோன்றினாலும் தனது பங்களிப்பை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். அதேநேரம், சிறுமி கிருத்திகாவாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரமே படத்தை தன் தோளில் சுமர்ந்து செல்கிறார். கல்வி மீது கொண்ட ஆசை, குடும்பத்தை விட்டு பிரியும் வேதனை, எதிர்காலம் குறித்த அச்சம் என பல்வேறு உணர்வுகளை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தி மனதில் இடம்பிடிக்கிறார். காளி வெங்கட், ஜான் விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக கையாள்ந்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எம். சுகுமார், மலைப்பகுதியின் இயற்கை அழகையும், பழங்குடியின மக்களின் எளிமையான வாழ்க்கை முறையையும் அழகாக திரையில் பதிவு செய்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ள இசை, குறிப்பாக பின்னணி இசை, பல உணர்ச்சி தருணங்களுக்கு கூடுதல் வலிமையை அளிக்கிறது. இயக்குநர் கணேஷ் விநாயகம், பழங்குடியின மக்களின் கல்வி, சாலை வசதி, அடிப்படை கட்டமைப்பு போன்ற நீண்டகால பிரச்சினைகளை சினிமா மொழியில் எளிமையாகவும் தாக்கமுள்ள வகையிலும் சொல்ல முயன்றிருக்கிறார்.
வணிக அம்சங்களை விட சமூக பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்தின் தனித்துவமாக அமைகிறது. ஆக்ஷன், மாஸ் காட்சிகள், வணிக சினிமா அம்சங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இது வேறுபட்ட அனுபவமாக இருக்கலாம். ஆனால், சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட, மனதைத் தொடும், சிந்திக்க வைக்கும் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு 'அருள்வான்' நிச்சயம் ஏமாற்றமளிக்காது. மொத்தத்தில்: கல்வி சமத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தும், உணர்வுகளும் சமூகப் பொறுப்பும் கலந்த தரமான படைப்பாக 'அருள்வான்' திகழ்கிறது.