NEET Protest : டெல்லி CJP போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதல்வர் விஜய்யின் மௌனமும், தலித் அமைச்சர்களின் நிலையும் - பா.ரஞ்சித் கேள்வி
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், நீட் விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் கையாண்டு வரும் மௌனத்தை கடுமையாக விமர்சித்தார்.
“மாணவர்கள் தாக்கப்படுவதைக் காணும்போதும், அவர்கள் போராடும்போதும் முதல்வர் மௌனப் பார்வையாளராக இருக்க முடியுமா? முதல்வர் விஜய் அந்த வீடியோக்களைப் பார்க்கவில்லையா? மாணவர்கள் போராடுவதற்கு அரசே இடமளிக்க வேண்டும். மக்கள் பக்கம் நிற்கும் ஒரு முதலமைச்சரைத்தான் நாங்கள் விரும்புகிறோம். நீட்டுக்கு எதிரான போராட்டம் வெறும் முழக்கமாக மட்டும் இருக்கக்கூடாது, நீங்களும் (முதல்வர்) எங்களுடன் இந்தப் போராட்டத்தில் களமிறங்க வேண்டும்” என்று பா.ரஞ்சித் வலியுறுத்தினார்.
மேலும், தலித் மக்களின் உரிமை மற்றும் அமைச்சர்களின் மௌனம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். “முதல்வர் விஜய் தனது அமைச்சரவையில் எட்டு தலித் அமைச்சர்களை நியமித்துள்ளார். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அமைச்சர் வன்னி அரசைத் தவிர வேறு எந்தத் தலித் அமைச்சராவது ஒரு முறையாவது தலித் பிரச்சினைகள் குறித்துக் குரல் கொடுத்திருக்கிறார்களா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
25
“நீட்டை முழுமையாக ஒழிக்க வேண்டும்” - வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், நீட் தேர்வு மத்திய அரசின் தோல்வியின் வெளிப்பாடு என்றார். “மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள் என்றால், அவர்களின் குறைகளைக் தீர்க்க வேண்டிய நிறுவனங்கள் சரியாகச் செயல்படவில்லை என்று அர்த்தம். நமது கோரிக்கை 'நியாயமான நீட்' என்பதாக இருக்கக்கூடாது; 'நீட்டை முழுமையாக ஒழிக்க வேண்டும்' என்பதாகவே இருக்க வேண்டும். என் நண்பரின் குழந்தைகள் கூட நீட் தேர்வுக்காக ஒரு கல்வி ஆண்டையே இழந்துள்ளனர். மருத்துவக் கல்வியை நம்மிடமிருந்து பறிக்கும் இந்த முறைக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.
35
“அரசியல் என்பது வெறும் பிழைப்புவாதமாகிவிட்டது” - அமீர்
இயக்குநர் அமீர் தனது உரையில் அரசியல்வாதிகளைக் கடுமையாக சாடினார். “ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஒரு சிறிய கூட்டம் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் காப்பாற்ற ஒரு பெரிய கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. நீட்டை ஒழிக்கும் ரகசியம் தன்னிடம் இருப்பதாகச் சொன்னவர்களும், அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொல்லச் சென்றவர்களும் அதிகாரத்தில் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் தீர்வைத் தர முடியாது. இவர்களிடம் தீர்வு கிடைக்கும் என்று நம்புவது ஏமாற்று வேலை. கோடிக்கணக்கான உறுப்பினர்களை வைத்துள்ளோம் என்று சொல்லும் எந்தக் கட்சியும் மாணவர்களுக்காக மக்களைத் திரட்ட முன்வருவதில்லை. அவர்களுக்கு அரசியல் வெறும் பிழைப்புவாதமாகவே உள்ளது” என்று குற்றஞ்சாட்டினார்.
நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பேசுகையில், இது தனது முதல் போராட்டம் என்றார். “கடந்த ஒரு வாரமாக மாணவர்களின் போராட்டத்தைக் கவனித்து வருகிறேன். எங்கோ டெல்லியில் போராட்டம் நடந்தாலும் நாம் இங்கு உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறோம். ரவீந்திரநாத் தாகூரின் 'அறிவு விலையின்றிச் சுதந்திரமாகக் கிடைக்க வேண்டும்' என்ற வரிகளுக்கேற்ப, அறிவு என்பது நமது பிறப்புரிமை. அதைத் மறுக்கும் எந்தக் கல்வி முறையும் மாற்றப்பட வேண்டும். மாணவர்களுடன் எப்போதும் துணை நிற்பேன்” என்றார்.
55
தெருக்குரல் அறிவு மற்றும் பிறர் பங்கேற்பு
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாடகர் தெருக்குரல் அறிவு, நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அடிப்படைக் கல்வியிலேயே குளறுபடிகள் இருப்பதாகவும், சமமற்ற சமூகத்தில் சமமான தேர்வு எப்படி சாத்தியமாகும் என்றும் கேள்வி எழுப்பினார். தான் தலைமைச் செயலகம் முன்பு போராடியபோது தன்னைச் சந்தித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறிய அறிவுரைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், நடிகர்-பாடகி ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் சாய் அபியங்கர் மற்றும் பாடகர் தெருக்குரல் அறிவு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.