ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ தம்பியிடம் கிடுக்குப்பிடி விசாரணை?

First Published Mar 25, 2023, 9:31 AM IST

11 ஆண்டு முன்பு நடந்த மர்மமான முறையில் அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றவர் மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

இவரது கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, தில்லை நகர் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

கொலை வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் பல  ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை. இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சிறப்பு புலனாய்வு குழு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. எஸ்.பி.  ஜெயக்குமார் தலைமையில்  40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இதில், ராமஜெயம் கொலை நடந்த அன்று திருச்சியில் முகாமிட்டிருந்த  20 ரவுடிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. 

இதில், 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையை  சிறப்பு புலனாய்வுக்குழு நடத்தினர்.  கடந்த மாதம் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 4 பேர் வீதம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. டெல்லியில் இருந்து வந்திருந்த மத்திய தடயவியல்துறை நிபுணர்கள், 12 பேரிடமும் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை கேட்டு அவற்றுக்கு பதில் பெற்றனர். ஆனாலும், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. 

இந்நிலையில், திடீர் திருப்பமாக திருச்சி மண்ணச்சநல்லுார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி தம்பி  ராஜா, அவரது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் சிலரை திடீரென விசாரித்துள்ளனர்.  இதுபற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில்;- ராமஜெயம் கொலை செய்யப்பட்ட அதே பாணியில்  2 பேரை புல்லட் ராஜா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்துள்ளார். இந்த இரண்டு சம்பவத்திலும் கொலையானவர்கள் கைகள் கம்பியால் கட்டப்பட்டிருந்தன. இது ராமஜெயம் கொலை செய்யப்பட்ட பாணியில் இருந்ததால், புல்லட் ராஜாவையும், மற்றவர்களையும் விசாரித்தோம் என தெரிவித்தார். 

click me!