
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜகவும், அதிமுகவும் ஏப்ரல் 2025-ல் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்டிஏ நடத்தும் என அறிவிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை உறுதிப்படுத்தினார். ஆனால், தற்போது கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி பிடிவாதத்தால் சில சவால்களும் எதிர்க்கொண்டு வருகின்றன.
டிசம்பர் 23-ஆம் தேதி, பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. கடந்த முறையைவிட பாஜக அதிக தொகுதிகளை டிமாண்ட் வைத்துள்ளது. பாமக, தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன் ஆகியோரை மீண்டும் என்டிஏ-வில் சேர்க்கும் பேச்சு வார்த்தை நடந்த நிலையில் அதிமுக வியூக வகுப்பாளர்கள் முந்திரிக்கொட்டை தனமாக வெளியிட்ட சீட் லிஸ்ட் வெளியானது. இதனால், வெறுப்பான ஓ.பி.எஸ், டிடிவி.தினகரன், பிரேமலதா ஆகியோர் அதிமுக மீது அதிருப்தியாகி வேற்று கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிற மாநிலங்களைப்போல தமிழகத்தில் மட்டும் ஏன் வலுவான கூட்டணி அமைக்க முடியவில்லை என அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்களிடம், பிரதமர் மோடி தன் வருத்தத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2014ல், மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பிறகு நாடு முழுதும் தனது செல்வாக்கை பாஜக விரிவுபடுத்தி வருகிறது. திரிபுரா, ஒடிஷா போன்ற மாநிலங்களில் கூட, முதல் முறையாக பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால், தமிழகத்தில் பாஜக-வால் வலுவான கூட்டணியை அமைக்கவே முடியவில்லை. கடந்த 2024 மக்களவை தேர்தலில் தனித்தனி அணிகளாக போட்டியிட்ட அதிமுகவும், பாஜகவும் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளன. கூட்டணியை அறிவித்து எட்டு மாதங்களான பிறகும் இந்தக் கூட்டணிக்கு எந்த கட்சியும் வரவில்லை. கூட்டணியில் ஏற்கனவே இருந்த பாமக- தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் எட்டிக்கூட பார்க்கவில்லை.
இதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழுவை கடந்த செப்டம்பரில் அமித் ஷா அமைத்தார். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், தமிழக கட்சிகளுடன் கூட்டணி பேச்சு நடத்திய அனுபவம் உள்ள மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை தமிழக பொறுப்பாளராக அமித் ஷா நியமித்துள்ளார். அவரும் சென்னை வந்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.
திமுகவை தோற்கடிக்க வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். அதிமுகவிலிருந்து பிரிந்த ஓபிஎஸ், டிடிவி.தினகரனை கூட்டணியிலாவது சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியும், எடப்பாடி பழனிசாமி விடாப்பிடியாக மறுத்து வருகிறார்.
அதேபோல், ராமதாஸ்- அன்புமணி மோதலால் பாமக பிளவுபட்டு ராமதாஸ் திமுக கூட்டணிக்கு செல்ல முயற்சிக்கிறார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் திமுக கூட்டணியை விரும்புவதும், அதிமுக - பாஜக கூட்டணிக்கு தலைவலியாக மாறியுள்ளது.
இந்நிலையில், தமிழக கூட்டணி நிலவரம் குறித்து அமித் ஷா, பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரிடம் பிரதமர் மோடி நிலவரத்தை கேட்டுள்ளார். அப்போது, வலுவான போட்டியில் தமிழக தேர்தல் களம் இருக்கும் நிலையில், திமுக அணிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முடியாத நிலை குறித்து, பிரதமர் தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, பாஜக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கடந்த 2014 மக்களவை தேர்தலில், பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக கூட்டணி, 18 சதவீத ஓட்டுகளுடன் இரண்டு இடங்களில் வென்றது. இந்த கூட்டணியை தக்க வைத்திருந்தால் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக - அதிமுகவுக்கு கடும் போட்டியை கொடுத்திருக்கலாம். அந்த வாய்ப்பை பாஜக தவற விட்டுவிட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முழு பதவிக்காலமும் அதிமுக ஆட்சி தொடர மத்திய பாஜக அரசே காரணம். அதன் பலன் பாஜகவுக்கு கிடைக்கவில்லை. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அமித் ஷா கூறியபடி டிடிவி.தினகரனின் அமமுக, தேமுதிகவை கூட்டணியில் சேர்த்திருந்தால் குறைந்தபட்சம் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைப்பதையாவது தடுத்திருக்கலாம். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இப்போதும் இதை சுட்டிக்காட்டி ஓபிஎஸ், டிடிவி.தினகரனை கூட்டணியில் சேர்க்க அமித் ஷா வலியுறுத்தியும் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. இதனால், வலுவான கூட்டணி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்கின்றனர்.