
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியவர் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெ ஜெயலலிதா. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாகப் பிரிந்தது. இதனால் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக எளிதாக வெற்றி பெற்று கருணாநிதி முதல்வரானார். 1989 தேர்தல் தோல்விக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் அரசியலில் இருந்து விலகவே, இரட்டை இலையுடன் சின்னத்துடன், அதிமுக என்ற மாபெரும் இயக்குமும் ஜெயலலிதாவின் வசமானது. அவர் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார்.
1989 ஆம் ஆண்டு சட்டசபையில் பெரும் களேபரம் நிகழ்ந்தது. ஜெயலலிதா தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. தலைவிரி கோலத்துடன் அவர் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய புகைப்படங்கள் தமிழக மக்கள் மத்தியில் அதிர்வலைகளை உண்டாக்கின. இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் அனுதாபம் ஏற்பட்டது. “நான் மீண்டும் இந்த சட்டசபைக்குள் முதல்வராகத்தான் நுழைவேன்” என்று அவர் சபதம் ஏற்றார்.
தமிழகத்தில் விடுதலை புலிகளின் அச்சம் இருப்பதாக அவர் பகிரங்க குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இதற்கிடையில் 1991 ஆம் ஆண்டு மத்தியில் இருந்த சந்திரசேகர் தலைமையிலான அரசு, விடுதலைப் புலிகள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகம் இருப்பதாக கூறி திமுக தலைமையிலான ஆட்சியை கலைத்தது. தொடர்ந்து வந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும், ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தனர்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக ராஜீவ் காந்தி டெல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அங்கு அவர் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு திமுகவின் மீது எல்டிடி ஆதரவு என்கிற முத்திரை குத்தப்பட்டது. திமுக விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாமல் இருந்ததே இதற்கு காரணம் என்றும், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மூலமாகதான் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் தீயாக பரவின.
இது அதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப்பெரிய அனுதாப அலையையும், திமுக மீது கோபத்தையும் ஏற்படுத்தியது. 1991 தேர்தலில், துறைமுகம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் பரிதி இளம்வழுதி ஆகிய இருவர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர். திமுக சார்பில் போட்டியிட்ட மற்ற அனைவரும் படுதோல்வியை சந்தித்தனர்.
அந்தத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக 164 இடங்களிலும், காங்கிரஸ் 60, இடங்களிலும் திமுக இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றது. ஜூன் 24 1991 ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக முதல் முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் ஜெயலலிதாவின் முதல் ஐந்து ஆண்டு காலம் ஊழல்களும், சர்ச்சைகளும் நிறைந்ததாக இருந்தது. வளர்ப்பு மகன் திருமணம், வாச்சாத்தி வன்கொடுமை, ஊழல் மிகுந்த அமைச்சர்கள், சொத்துக் குவிப்பு வழக்குகள், பேனர் கலாச்சாரம் என ஜெயலலிதா மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க தொடங்கினார்.
மேலும் சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சியில் அதிகாரம் செலுத்துவதாக புகார்கள் எழுந்தன. 1991 ஆம் ஆண்டு இமாலய வெற்றியைப் பெற்ற ஜெயலலிதா 1996 தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவினார். பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதா திமுகவின் இளம் வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வி அடைந்தார். 1991 ஆம் ஆண்டு 164 இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக, 1996 ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஊழல் புகார்கள், அரசு அதிகாரிகளின் மீதான தாக்குதல்கள், ஆடம்பரமான வாழ்க்கை முறை ஆகியவை ஜெயலலிதாவின் 1996 தேர்தல் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தன.
இருப்பினும் சேலத்தில் நிலவிய பெண் சிசுக்கொலையை தடுக்க ‘தொட்டில் குழந்தை திட்டம்’ கொண்டு வந்தார். ஆசியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்காக தனி காவல் நிலையங்களை அமைத்தார். உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார். மண்டல் கமிஷன் தீர்ப்பால் இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்ற நிலை வந்த போது சட்டப் போராட்டம் நடத்தி 65 சதவீத இட ஒதுக்கீடை வழங்கி, அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்தார். இதன் காரணமாக ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ அன்று அவர் அழைக்கப்பட்டார்.
1991 இல் அவர் ஆட்சியைப் பிடித்த விதம் ஒரு பெண் தலைவராக தமிழக அரசியலில் புது சதாப்தத்தை தொடங்கி வைத்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு உடைந்த அதிமுகவை ஒன்றிணைத்து, மிகப்பெரிய வெற்றியை அவர் ஈட்டிய விதம் என்பது ஒரு திரில்லர் நாவலுக்கு இணையானது.