Parenting Tips : உங்க குழந்தை வீட்ல நல்லா பேசுது, ஆனா ஸ்கூல் அல்லது வெளியாட்கள் முன்னாடி அமைதியா ஆகிடுதா? இதை சாதாரண கூச்சம்னு நினைக்காதீங்க. இது 'செலக்டிவ் மியூட்டிஸம்' என்கிற மனநலப் பிரச்சனையா இருக்கலாம்.
"என் பையன்/பொண்ணு ரொம்ப கூச்ச சுபாவம். வீட்டுல ஒரே பேச்சா பேசி என் தலையை சாப்பிடுவான், ஆனா ஸ்கூலுக்குப் போனா இல்ல வெளியில யாராவது வந்தா அப்படியே வாயை மூடிக்குவான். டீச்சர்ஸ் கூட கிளாஸ்ல எந்த கேள்விக்கும் பதில் சொல்றதில்லைனு சொல்றாங்க." - இப்படி நிறைய பெற்றோர்கள் புலம்புறத நாம கேட்டிருப்போம். நாமளும், 'குழந்தை கொஞ்சம் கூச்சப்படுது, வளர வளர சரியாகிடும்'னு நினைப்போம். ஆனா, மனநல நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னா, இந்த மாதிரி அமைதியா இருக்கிறது வெறும் கூச்சம் மட்டும் இல்ல, இது 'செலக்டிவ் மியூட்டிஸம்' என்ற ஒரு குறிப்பிட்ட மனநலப் பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
இது ஒரு வகையான பதற்றக் கோளாறு. இந்தப் பிரச்சனை இருக்கிற குழந்தைகளால எல்லா இடங்களிலும் சகஜமா பேச முடியாது. அவங்க வீட்டுல, அப்பா-அம்மா அல்லது ரொம்ப நெருக்கமானவங்ககிட்ட நல்லா இயல்பா பேசுவாங்க, விளையாடுவாங்க. ஆனா, ஸ்கூல், உறவினர் வீடு அல்லது அறிமுகம் இல்லாத இடங்களுக்குப் போனா, அவங்க வாய்க்கு பூட்டு போட்ட மாதிரி ஆகிடுவாங்க. அவங்களுக்கு பேசணும்னு ஆசை இருக்கும், ஆனா உள்ளுக்குள் இருக்கிற பயமும் பதற்றமும் அவங்களை பேச விடாது. பல நேரங்கள்ல, குழந்தைங்க சைகையில பேசுவாங்க, தலையை ஆட்டி பதில் சொல்வாங்க, ஆனா வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டாங்க.
35
இந்தப் பிரச்சனை ஏன் வருது?
இதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான பதற்றம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு. புதிய சூழல், புதிய மனிதர்கள் முன்னாடி பேசுகிற பயத்தில் இருந்துதான் இந்தப் பிரச்சனை உருவாகுது. சில சமயம், அளவுக்கு அதிகமான கண்டிப்பு, திட்டு வாங்குறது அல்லது சின்ன வயசுல நடந்த ஏதாவது மோசமான அனுபவம் கூட இதற்கு காரணமா இருக்கலாம். குடும்பத்தில் யாருக்காவது பதற்றக் கோளாறு இருந்தா, மரபணு ரீதியாகவும் இது வர வாய்ப்பிருக்கு.
உங்க குழந்தை வீட்டுல இயல்பா இருந்துட்டு, ஸ்கூல்லயோ அல்லது வீட்டுக்கு வெளியிலயோ தொடர்ந்து ஒரு மாசத்துக்கும் மேல பேசாம இருந்தா, நீங்க கவனமா இருக்கணும். அவங்க கண்ணைப் பார்த்து பேச பயந்தாலோ, கிளாஸ்ல பதில் சொல்லும்போது அழுதாலோ அல்லது பதற்றத்தில் உடம்பை சுருக்கிக்கிட்டாலோ, அது சாதாரண கூச்சம் இல்லை.
இந்த மாதிரி நேரத்துல, குழந்தையை கட்டாயப்படுத்தி பேச வைக்கவோ, திட்டவோ கூடாது. அப்படி செஞ்சா அவங்களோட பயம் இன்னும் அதிகமாகும். அவங்ககிட்ட நண்பர் மாதிரி பழகுங்க, அவங்களோட தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவுங்க. சின்ன சின்ன வெற்றிகளுக்கு பாராட்டுங்க. ஸ்கூல் டீச்சர்ஸ்கிட்ட பேசி, கிளாஸ்ல குழந்தையை பேசச் சொல்லி அழுத்தம் கொடுக்க வேண்டாம்னு சொல்லுங்க. பெரும்பாலான நேரங்களில், பிஹேவியர் தெரபி மற்றும் ப்ளே தெரபி மூலமா இந்தப் பிரச்சனையை முழுமையா சரி செஞ்சிடலாம். அதனால, தாமதிக்காம ஒரு குழந்தைகள் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
55
குழந்தையை கட்டாயப்படுத்தி பேச வைக்கலாமா?
கண்டிப்பாக கூடாது. 'ஏன் பேச மாட்ற?', 'பதில் சொல்லு', 'இவ்வளவு வெட்கப்பட்டா எப்படி?' — இந்த மாதிரி கேள்விகள் கேட்டு அழுத்தம் கொடுத்தா, பிரச்சனை குறையாது, மாறாக அவங்களோட பதற்றம் இன்னும் அதிகமாகும். குழந்தைக்கு பாதுகாப்பான, வசதியான சூழலை ஏற்படுத்தித் தருவதுதான் முக்கியம். அவங்களுக்கு நேரம் கொடுக்கணும். பேசச் சொல்லி திரும்பத் திரும்ப வற்புறுத்தாம, அவங்களா மெதுவா வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்கணும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.