காஷ்மீரின் அழகுப் பெட்டகமான தால் ஏரியில், நேரு பூங்காவிற்கு அருகில் ஒரு அபூர்வமான மிதக்கும் அஞ்சலகம் இயங்கி வருகிறது. பழமை மாறாத காஷ்மீரி பாணி படகு வீட்டைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் முகப்பில், இந்திய அஞ்சல் துறையின் முத்திரை கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இது வெறும் அழகுக்காக அமைக்கப்பட்டக் காட்சிப் பொருள் அல்ல; வழக்கமான போஸ்ட் ஆபீஸ்களைப் போலவே அத்தனை சேவைகளும் இங்கு தடையின்றி நடக்கும். ஏரியைச் சுற்றியுள்ள உள்ளூர் வாசிகள், வணிகர்கள், படகோட்டிகள் மற்றும் சுற்றுலா வந்து செல்லும் பயணிகள் என பலரும் இதன் பயனைப் பெறுகின்றனர்.
இங்கிருந்து அனுப்பப்படும் கடிதங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு; ஒவ்வொரு தபாலிலும் தால் ஏரியையும், ஷிகாரா படகையும் சித்தரிக்கும் பிரத்யேக ரப்பர் முத்திரை பதிக்கப்படுகிறது. இதனால், இங்கு வரும் பயணிகள் தங்கள் நினைவலைகளை அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த அஞ்சலகத்தையே அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.
இங்கு சேகரிக்கப்படும் அஞ்சல்கள் தினமும் பணியாளர்களால் ஸ்ரீநகரின் முதன்மை போஸ்ட் ஆபீஸுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, மிதக்கும் வீடுகளுக்கு அஞ்சல்களைக் கொண்டு சேர்க்க ஊழியர்கள் ஷிகாரா படகுகளையே பயன்படுத்திக் கொள்கின்றனர்.