
இன்றைய காலகட்டத்தில் செல்போன் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பகுதியாகிவிட்டது. செல்போன் இல்லாத நபரை காண்பது அரிதாகிவிட்டது. குழந்தைகளும் கூட செல்போனில் பொழுதுபோக்க கற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் இதுவே அவர்களுடைய
கவனச்சிதறலின் முக்கிய காரணமாகவும் உள்ளது. செல்போன் மூலம் குழந்தைகள் பல்வேறு புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டாலும், அவர்களுடைய படிப்பையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் கருவியாகவும் அது உள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகளை 'இப்படி' கண்டித்தால் மோசமாக தான் வளர்வாங்க... இனிமேல் இதை சொல்லாதீங்க!!
அண்மையில் சமூக வலைதளத்தில் வைரலான ஒரு சிசிடிவி வீடியோவில், ஒரு சிறுவன் செல்போனில் கேம் விளையாடி கொண்டிருக்கிறான். அவன் தாயார் அந்த போனை பிடுங்கிவிட்டு அவனிடம் புத்தகத்தைக் கொடுத்து படிக்க அறிவுறுத்துகிறார். புத்தகத்துடன் எரிச்சலாய் அமர்ந்திருந்த அந்த சிறுவன் சிறிது நேரத்தில் அங்கிருந்த ஒரு கிரிக்கெட் பேட் கொண்டு தன் தாயை கொடூரமாகத் தாக்கி விட்டு மீண்டும் செல்போனில் கேம் விளையாடுகிறான்.
இந்த வீடியோ பார்க்கும் போது காண்பவர்கள் மனம் கனத்துபோகும். அந்தளவுக்கு குழந்தைகளுக்கு செல்போன் மோகம் உள்ளது. இந்த நிலைக்கு குழந்தைகள் செல்லும் முன்பாக அவர்களை நல்வழிபடுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.
இதையும் படிங்க: குழந்தைகிட்ட ரொம்ப கண்டிப்பா நடந்துக்காதீங்க.. இல்லனா இந்த பாதிப்புகள் வரும்!
கவனச் சிதறல்
செல்போன்கள் ஒருவரின் கவனத்தை ஈர்க்கும். குழந்தைகள் படிக்க முயற்சி செய்யும் போது, கேம் செயலிகளின் தொடர்ச்சியான அறிவிப்புகள் (notification) அவர்களை திசைதிருப்பும். இப்படி அடிக்கடி குழந்தைகளின் மனம் செல்போன் மீது ஈர்க்கப்படுவதால் ஏற்படும் கவனச்சிதறல்கள் கல்வியில் ஆர்வத்தை குறைக்கும்.
இதை தவிர்க்க குழந்தைகள் படிக்க அமர்ந்தால் செல்போனை சைலன்ட் மோட் அல்லது "தொந்தரவு செய்யாதே" எனும் DND (Do Not Disturb) போன்றவற்றில் வைத்து விடுங்கள். இதனை குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்கவேண்டும். உங்களுடைய போனில் குழந்தைகள் எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் மற்றும் செயலிகளின் விதிகளிலும் கட்டுபாடுகளை அமைக்க வேண்டும்.
கேம்களுக்கு அடிமை:
குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தினால் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகிவிடுவர். இதனால் அவர்கள் படிக்கும் காலம் குறையும். சில குழந்தைகள் இரவில் தூங்காமல் விளையாடுகின்றனர். இது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். சாப்பிடுவதை கூட தவிர்த்து கேமில் மூழ்கிவிடுவார்கள்.
இப்படி வளரும் குழந்தைகள் வகுப்பில் கவனம் செலுத்தமாட்டார்கள். ஆகவே பள்ளி நாட்களில், இரவு நேரத்தில் குழந்தைகள் விளையாடினால் அவர்களுக்கு நேர வரம்புகளை பெற்றோர் விதிக்க வேண்டும். இரவில் தூங்கும் முன்பு செல்போன் பயன்படுத்தாமல் புத்தகம் வாசிப்பதை அறிமுகபடுத்தலாம்.
சமூக ஊடகம்:
இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற செயலிகளில் பல மணிநேரமாக ஸ்க்ரோலிங் செய்து வீடியோக்களை பார்ப்பது நல்லதல்ல. இது நேர விரயம். குழந்தைகளின் படிக்கும் நேரம் மட்டுமின்றி மன ஆரோக்கியமும் இதனால் பாதிக்கிறது. இந்த வீடியோ பார்க்கும் பழக்கத்தால் குழந்தைகள் மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டுப் பார்க்க வாய்ப்புள்ளது. இதனால் அழுத்தம் ஏற்படலாம். உங்கள் குழந்தை யூடியூப் ஷார்ட்ஸ் (youtube shorts) உள்ளிட்ட மற்ற சமூக ஊடகங்களில் அதிக வீடியோ பார்க்கும் பழக்கம் கொண்டிருந்தால் அவர்களுக்கு அதன் நன்மை, தீமை குறித்து பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களுடைய பயன்பாட்டு நேரத்தை குறைக்க வேண்டும்.
மொபைல் போனில் வீட்டுப்பாடம்:
செல்போனில் நமக்குத் தேவையான பல தகவல்கள் உள்ளன. எந்த விஷயங்களை குறித்தும் இணையத்தில் நாம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதையே நம்பியிருப்பது படிப்பதற்கு உதவாது. செல்போனை படிக்க பயனுள்ள கருவியாக எப்படி பயன்படுத்த வேண்டும் என பெற்றோர் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது அவசியம். சொல்போன் உதவியின்றி வீட்டுப் பாடங்களை முடிக்க குழந்தைகளை ஊக்குவிக்கலாம்.
இரவில் திரை நேரம்:
இரவில் செல்போன்களை அதிகமாக பயன்படுத்தினால் உடல்நலம் மோசமாகும். இரவில் தான் நம் உடல் ஓய்வெடுக்கும். அந்த சமயத்தில் குழந்தைகள் செல்போனில் மூழ்கி கிடந்தால் செல்போனின் தொடு திரைகள் மூலமாக வெளிப்படும் நீல ஒளி தூக்க சுழற்சியை பாதிக்கும். இப்படி ஓய்வின்றி இருப்பதால் பள்ளி நேரங்களில் சோர்வும், படிப்பில் கவனமின்மையும் ஏற்படுகிறது. எப்போதுமே
குழந்தைகள் உறங்கும் முன்பாக 1 மணிநேரத்திற்கு போன் கொடுக்கக் கூடாது.
தேவையில்லாத விளம்பரம்:
குழந்தைகள் செல்போன் பார்ப்பதை முறையாக கண்காணிக்காவிட்டால் இணையத்தில் உள்ள அபத்தமான, தேவையில்லாத விஷயங்களை பார்க்க நேரிடும். அதனால் கல்வியில் இருந்த கவனம் சிதறலாம். சில குழந்தைகளுக்கு மனநல ஆரோக்கியம் பாதிக்கலாம். குழந்தைகள் பயன்படுத்தும் போன்களில் தகவல்களை நெறிபடுத்த, பெற்றோர் அமைப்புகளை சரிபார்க்கவும். இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வருத்தம் ஏதேனும் இருந்தால் அதை பற்றி தெரிந்து கொண்டு அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.