
உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர். தங்கள் உணவு பழக்க வழக்கத்தை மாற்றுவது, நடைபயிற்சி, உடற்பயிற்சிகள் என பல விஷயங்களை முயன்று வருகின்றனர். இந்த பதிவில் உடல் எடையை குறைப்பதில் முக்கியமாக உதவக்கூடிய விதியாக சொல்லப்படும் 2-2-2 முறை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த விதி தற்போது மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. 2-2-2 என்ற முறை தான் அந்த பிரபலமான விதியாகும். அதென்ன 2-2-2 என தோன்றுகிறதா? அதாவது 2 அளவுகளில் சாப்பிடுவதும், உடற்பயிற்சி செய்வதையும் தான் இந்த விதி குறிக்கிறது. இந்த முறையில் புரதம், கொழுப்பு சத்து, நார்ச்சத்து அடங்கிய சரிவிகித உணவையும், போதுமான அளவு தண்ணீரையும் எடுத்து கொள்ள வேண்டும்.
2-2-2 விதியில் எப்படி சாப்பிட வேண்டும்?
உடல் எடையை குறைக்க 2-2-2 விதியை பின்பற்றுபவர்கள் பழங்களையும், காய்கறிகளையும், தண்ணீரையும் 2 பகுதிகளாக பிரித்து எடுத்து கொள்ள வேண்டும். அதாவது தினமும் 2 வகை பழங்கள், 2 வகை காய்கறிகள், 2 லிட்டர் தண்ணீர் மற்றும் இரண்டு வேளைகளில் நடைபயிற்சி செய்ய வேண்டும். இதுவே 2-2-2 விதியாகும். இந்த விதியை பின்பற்றுபவர்கள் கட்டாயம் 2 லிட்டர் தண்ணீரை அருந்த வேண்டும். இப்படி 2 லிட்டர் தண்ணீர் அருந்துவதால் அவர்களுடைய ஆற்றல் அதிகரிப்பதோடு பசியும் குறைகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது ரொம்ப முக்கியம்.
தினமும் ஏதேனும் 2 வகை பழங்கள், 2 வகை காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். அது உங்களுடைய உணவில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிரம்பியிருக்க உதவும். குறிப்பாக செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து, உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனேற்ற இருப்பதை உறுதி செய்ய பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். இவை உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவும்.
நடைபயிற்சி:
ஒரு நாளில் 2 முறை நடைபயிற்சி செய்வது உடல் எடையை கணிசமாகக் குறைக்க உதவும். இதய செயல்பாடுகளை மேம்படுத்தும். உடல் எடையை குறைப்பதில் நடைபயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுடைய உடலை சுறுசுறுப்பாக வைக்கவும் தினமும் நடைபயிற்சி செய்யலாம். மேலும், உங்களுடைய மனஅழுத்த ஹார்மோனான கார்டிசோலைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் நடைபயிற்சி உதவுகிறது. இரண்டு நேரம் நடைபயிற்சி செய்வதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
இதையும் படிங்க: டயட், உடற்பயிற்சி வேண்டாம்; இந்த 7 விஷயங்கள் பண்ணா உடல் எடை சர்ருனு குறையும்!!
நொறுக்குத்தீனிகளை குறைப்பது எப்படி?
அடிக்கடி நொறுக்கு தீனிகளை உண்பது உடல் எடையை அதிகரிக்கிறது. ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிகளை உண்பதை குறைக்க அதற்கு மாற்றான விஷயங்களை செய்ய வேண்டும். உதாரணமாக உங்களுக்கு இனிப்பு பண்டங்களை அதிகம் சாப்பிட வேண்டும் என தோன்றும் போது ஒரு வாழைப்பழம் உண்ணலாம். இது சாக்லேட் போன்றவற்றை உண்ணத் தூண்டும் உணர்விலிருந்து உங்களை தற்காலிகமாக நிறுத்த உதவும். ஏனென்றால் இனிப்பு பண்டங்களை அதிகம் உட்கொள்ளும்போது உங்களுடைய உடல் எடை அதிகரிக்கிறது.
அதிக தின்பண்டங்களை சாப்பிட மனம் அலைபாயும்போது தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்திக் கொண்டால் அதை கட்டுப்படுத்த முடியும். உங்களுடைய உணவு திட்டத்தில் தினமும் இரண்டு பழங்களும் இரண்டு காய்கறி வகைகளும் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்வது நல்லது. இது உடல் எடையை குறைக்கும் உங்களுடைய பயணத்தில் உதவிகரமாக இருக்கும். 2-2-2 விதியானது எடை குறைக்க சிறந்த வழியாகும்.
விதி 2-2-2 இன் குறைகள்:
இந்த விதிமுறையில் சில குறைகளும் உள்ளன. இந்த விதிமுறையில் உணவுத் திட்டம் குறித்து முழு விவரங்கள் இல்லை. அதனால் ஒருவரின் அன்றாட கலோரி உட்கொள்ளலை, எடை குறைப்புக்கு ஏற்றவாறு முறையாக திட்டமிடுவது சிரமமாக இருக்கும். ஒவ்வொருவருடைய உடலும், அவர்களுடைய எடை கட்டுப்பாட்டு பயணமும் வெவ்வேறானவை. அதனால் இந்த திட்டத்தை பொதுவாக எல்லோரும் பயன்படுத்துவது முழு பயன்களையும் அளிக்கும் என கூறிவிட முடியாது.
ஒருவருக்கு தேவையான உணவு என்பது அவருடைய பாலினம் அன்றாட செயல்பாடுகள் வயது போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்தது அதனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு திட்டத்தை பரிந்துரைக்க முடியாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் இந்த கூற்றின்படி பார்த்தால் மேலே சொன்ன 2-2-2 விதியை பின்பற்றுவது சிலருக்கு கடினமாக இருக்கலாம்.
மேலோட்டமாக பார்ப்பதற்கு இந்த முறை முழு பலனளிப்பதாக கவர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் போன்றவற்றை இது அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க இந்த முறையை பின்பற்றும் முன்னர் உங்களுடைய மருத்துவரிடம் அல்லது ஏதேனும் நிபுணரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.
இதையும் படிங்க: பவர் வாக் பற்றி தெரியுமா? உடல் எடையை குறைக்க இந்த 'வாக்கிங்' முறை தான் சிறந்தது!!