Hotel Room Safety Hacks: ஹோட்டல் அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் கெட்டில்களை பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கு பின்னால் சில அருவருப்பான காரணங்களும் உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
நாம் அனைவருமே ஏதாவது ஒரு காரணத்திற்காக ஹோட்டல்களில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. சுற்றுலாத்தலங்கள், ஆன்மீகச் சுற்றுலா அல்லது வேலை விஷயமாக பிற ஊர்களுக்கு செல்லும் பொழுது அங்கு ஒரு சில நாட்கள் அறை எடுத்து தங்கும் கட்டாயம் உருவாகிறது. அந்த அறையில் உள்ள பல பொருட்களை நாம் பயன்படுத்துவோம். ஆனால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் கெட்டில் போன்ற பொருளை பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஹோட்டல் அறைகளில் உள்ள கெட்டில்கள் பாதுகாப்பானவை இல்லை
ஹோட்டல் நிர்வாகம் தங்கும் பயணிகளுக்காக அறைகளில் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. படுக்கைகள், போர்வைகள், தொலைக்காட்சி, ஏசி, நாற்காலி போன்ற வசதிகள் இருக்கும். மேலும் தேநீர் அல்லது டீ தயாரிப்பதற்கு ஒரு மின்சார கெட்டிலும் வழங்கப்பட்டிருக்கும். குளிர் பிரதேசங்களில் உள்ள அறைகளில் கட்டாயம் இது இருக்கும். பல முன்னணி ஹோட்டல்களிலும் இந்த கெட்டில் இருப்பதை நம்மால் காண முடியும். இதை பயன்படுத்தி தண்ணீர் சுட வைப்பது, தேநீர் தயாரிப்பது, காபி போடுவது போன்றவற்றை எளிதாக செய்ய முடியும்.
ஆனால் இந்த கெட்டில்களை பயன்படுத்துவதற்கு ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என ஹோட்டல் நன்னடத்தை நிபுணரான வில்லியம் ஹான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹோட்டல் அறையில் வைக்கப்பட்டுள்ள கெட்டிலை பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று கூறியுள்ள அவர், நாம் எதிர்பாராத நோக்கங்களுக்காக பலரும் கெட்டிலை பயன்படுத்துவதாக கூறியிருக்கிறார். ஒரு அறிக்கையின் படி பலர் ஹோட்டல் கெட்டில்களை தண்ணீர் கொதிக்க வைக்க மட்டுமல்லாமல், உள்ளாடைகள் போன்ற சிறிய பொருட்களை துவைக்கவும் பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
ஒரு கணக்கெடுப்பில் 23 சதவீத மக்கள் தங்கள் உள்ளாடைகளை ஹோட்டல் கெட்டிலில் துவைப்பதை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், குழந்தைகளுக்கான உள்ளாடைகள் மற்றும் சிறிய துணிகளையும் கெட்டிலைப் பயன்படுத்தி துவைப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்கள் தெரிய வந்த பின்னர் ஹோட்டல் கெட்டில்களை முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் பயன்படுத்த வேண்டாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். கெட்டிலை பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டால் அதில் தண்ணீரை நிரப்பி ஒரு முறைக்கு இருமுறை கொதிக்க வைத்து அதை ஊற்றிவிட்டு புதிய தண்ணீர் கொண்டு அலசி அதன் பின்னரே பயன்படுத்த வேண்டும் என்று வில்லியம் கூறுகிறார்.
ஹோட்டல்களுக்கு செல்லும் பொழுது இதை நினைவில் கொள்ளுங்கள்
எல்லா ஹோட்டல்களும் ஒரே மாதிரியானவை கிடையாது. பெரும்பாலான ஹோட்டல்கள் தங்கள் அறைகளை தவறாமல் சுத்தம் செய்கின்றனர். கெட்டில் போன்ற உபகரணங்களை நன்கு கழுவி பராமரிக்கின்றனர். இருப்பினும் ஹோட்டல்களில் தங்கும் பொழுது கூடுதல் முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டியது அவசியம். கெட்டிலை பயன்படுத்துவதற்கு முன்னர் அதை முழுமையாக சுத்தம் செய்து, ஒரு முறை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, பின்னர் பயன்படுத்துவது பாதுகாப்பானது. ஹோட்டல்களுக்கு செல்லும் பொழுது இதை மறக்காமல் நினைவில் கொள்ளுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.