Copper Vessel Cleaning: செப்புப் பாத்திரங்களில் படியும் கருமை மற்றும் கறைகளை நீக்க, விலை உயர்ந்த கெமிக்கல்கள் தேவையில்லை. உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே அவற்றை மீண்டும் புதுசு போல பளபளக்க வைக்க முடியும்.
வீடுகளில் செப்புப் பாத்திரங்கள் பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. உடல் நலத்திற்காக செப்புக் குடத்தில் தண்ணீர் வைத்துக் குடிக்கும் பழக்கம் பல தலைமுறைகளாகத் தொடர்கிறது. ஆனால், நாளாக ஆக இந்தக் செப்புப் பாத்திரங்கள் கறுத்து, பச்சை நிறப் படிவம் பிடித்துப் போய்விடுவதைப் பார்த்திருப்போம். இதற்காக விலை உயர்ந்த கெமிக்கல்களை வாங்கிப் பணத்தை செலவழிக்கத் தேவையில்லை. உங்கள் சமையலறையிலேயே இதற்கான தீர்வு இருக்கிறது.
செப்புப் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதற்கான மிக பயனுள்ள வழி எலுமிச்சையும் உப்பும் தான். ஒரு எலுமிச்சைப் பழத்தை பாதியாக வெட்டி, அதன் மீது கல் உப்பைத் தொட்டு, பாத்திரத்தின் மீது மெதுவாகத் தேய்த்தால் போதும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் ஆக்சிஜனேற்றத்தால் ஏற்படும் கருமையையும், உப்பு கறைகளையும் நீக்கிவிடும். தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் கழுவினால், பாத்திரம் பளிச்சிடும்.
ரொம்ப நாட்களாக சுத்தம் செய்யப்படாத, அதிக அழுக்கு படிந்த பாத்திரங்களுக்கு வினிகர் மற்றும் சமையல் சோடா கலவை சிறந்த பலனைத் தரும். இரண்டையும் கலந்து பேஸ்ட் போல ஆக்கி, பாத்திரம் முழுவதும் தடவி 10 நிமிடங்கள் விட்டுவிடவும். பின்னர் மென்மையான துணியால் தேய்த்துக் கழுவினால், அழுக்குகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். ஆனால், ஸ்டீல் ஸ்கிரப்பர் போன்ற கடினமான பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம், அது பாத்திரத்தின் மேற்பரப்பில் கீறல்களை ஏற்படுத்திவிடும்.
அடுத்ததாக, நம் பாரம்பரிய சமையலில் இடம்பிடிக்கும் புளி, பிடிவாதமான கறைகளை நீக்குவதில் கில்லாடி. சிறிதளவு புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, அந்த விழுதை பாத்திரத்தின் மீது தடவி 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, மென்மையான ஸ்கிரப்பர் கொண்டு தேய்த்தால், பல நாள் கறையும் காணாமல் போய்விடும்.
இதேபோல, கோதுமை மாவு, உப்பு, வினிகர் கலந்த பேஸ்ட்டும் ஒரு சிறந்த இயற்கை பாலிஷ் போல செயல்படும். இந்த பேஸ்ட்டை தடவி 15 நிமிடங்கள் கழித்துத் துடைத்தால், பாத்திரம் புதுசு போல மின்னும். லேசான மங்கலான நிறத்திற்கு, தக்காளிச் சாற்றைத் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
செப்புப் பாத்திரங்கள் எப்போதும் பளபளப்பாக இருக்க, தினசரி பராமரிப்பு அவசியம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும், வெதுவெதுப்பான நீரில் லேசான சோப் கொண்டு கழுவி, உடனடியாக உலர்ந்த துணியால் துடைத்துவிட வேண்டும். ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்வதே, பாத்திரங்கள் விரைவில் கறுப்பதைத் தடுக்கும். இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் வீட்டுச் செப்புப் பாத்திரங்கள் பல ஆண்டுகள் அதன் பொலிவை இழக்காமல் இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.