
எண்ணெய் இல்லாத சமையலை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. சமையலில் எண்ணெய் முக்கிய பங்கு வகிப்பதுடன், உணவுகளின் சுவையை மேம்படுத்த உதவுகிறது. பூரி, பக்கோடா, சமோசா போன்ற உணவுகளை எண்ணெய்யில் பொரித்த பின்னர் மீதமிருக்கும் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்துவது மிகவும் பொதுவான நடைமுறையாகும். இருப்பினும், சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதால் ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுமா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
எண்ணெயை அதிக சூடாக்கும் போதும் அதனை மீண்டும் பயன்படுத்தும் போதும் அதன் கொழுப்புகளில் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது, இது கொழுப்பு மூலக்கூறுகளின் கட்டமைப்பை மாற்றுகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகினர். மேலும் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதால் அது டிரான்ஸ்-ஃபேட்டி ஆசிட்களின் அளவை அதிகரிக்கிறது, இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
டிரான்ஸ் கொழுப்புகள் என்பது ஆபத்தான கொழுப்பு வகையாகும். எண்ணெயை அதிகமாக சமைக்கும் போது அல்லது பல முறை மீண்டும் பயன்படுத்தினால் எண்ணெயில் உள்ள டிரான்ஸ் கொழுப்புகளின் அளவு அதிகரிக்கிறது. இது இருதய ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகிறது, இதய நோய்க்கு வழிவகுக்கும். எண்ணெயை மீண்டும் மீண்டும் வறுப்பது அதன் இயற்பியல், ஊட்டச்சத்து மற்றும் உணர்ச்சி பண்புகளில் பாதகமான மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கூறுகிறது.
யாரெல்லாம் நெய் சாப்பிடவே கூடாது? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்?
எனவே பொரிப்பதற்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் எண்ணெயை சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.. ஆனால் வீணாவதைத் தவிர்க்க அல்லது வேறு காரணங்களுக்காக நீங்கள் அதை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்றால், சில உதவிக்குறிப்புகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இது நமது ஆரோக்கியத்தின் எதிர்மறையான தாக்கத்தை குறைக்கும்.
மீதமுள்ள எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்:
ஒருமுறை பொரிக்க பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் தாளிக்கவோ அல்லது வதக்கவோ பயன்படுத்தலாம். அதை மீண்டும் பொரிப்பதற்கு பயன்படுத்தக் கூடாது. காற்றுப் புகாத கண்ணாடி கொள்கலனில் எண்ணெயைச் சேமிப்பதற்கு முன் உணவுத் துகள்களை வடிகட்டவும். குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமித்து, காற்று மற்றும் ஈரப்பதம் வெளிப்படாமல் இருக்க ஒரு மாதத்திற்குள் கொள்கலனை இறுக்கமாக மூடவும்.
நேரடி சூரிய ஒளியில் வைக்காமல், குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் கொள்கலனை சேமிக்கவும். புத்துணர்ச்சி மற்றும் தரத்தை உறுதிப்படுத்த ஒரு மாதத்திற்குள் எண்ணெயை மீண்டும் பயன்படுத்திவிட வேண்டும்.
எண்ணெய் கெட்டுப்போய்விட்டதா என்பதை சரிபார்ப்பது அவசியம். எண்னெய்யின் மேற்பரப்பில் நுரை, வாசனை, அடர்த்தியான அமைப்பு ஆகியவை இருந்தால் அந்த எண்ணெய் கெட்டுப்போய்விட்டது என்று அர்த்தம். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த தொடங்கினால் அது தீங்கு விளைவிக்கும் கலவைகளை வெளியிடுகிறது மற்றும் சமைக்கப்படும் உணவின் தரத்தை பாதிக்கும்.
மீதமுள்ள எண்ணெயின் அளவைக் குறைக்க சமைக்கும் போது எண்ணெயை மிதமான அளவில் பயன்படுத்துங்கள். மிதமாகப் பழகுவது எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதற்கான தேவையைக் குறைக்கிறது. ஒட்டுமொத்த விரயத்தைக் குறைக்க உதவுகிறது.
சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது சிக்கனமான அணுகுமுறை போல் தோன்றலாம், ஆனால் அது நமது ஆரோக்கியத்திற்கு சாத்தியமான அபாயங்களை ஏற்படுத்துகிறது. எண்ணெயை மீண்டும் பயன்படுத்தும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் நம் உடலில் தீங்கு விளைவிக்கும், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களின் அளவை அதிகரிக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க, முடிந்தவரை உணவுகளை வறுக்க புதிய எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லது.