ஷாக்... 20 கோடி திருப்பதி லட்டுகளில் கலப்பட நெய்! தேவஸ்தானம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Published : Nov 23, 2025, 03:40 PM IST

உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் உறுதியாகியுள்ளது. 2019 முதல் 2024 வரை சுமார் 20 கோடி லட்டுகள், ரூ.250 கோடி மதிப்பிலான கலப்பட நெய்யில் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

PREV
13
திருப்பதி லட்டுகளில் கலப்படம்

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையில், சுமார் 20 கோடி லட்டுகள் கலப்பட நெய்யைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.நாயுடு இதுகுறித்த முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 48.76 கோடி லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கோயில் வருகைப் பதிவேடுகள், நெய் கொள்முதல் மற்றும் லட்டு விற்பனைத் தரவுகளைக் கணக்கிட்டதில், இதில் சுமார் 20 கோடி லட்டுகள் கலப்பட நெய்யில் தயாரிக்கப்பட்டவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

23
ரூ.250 கோடி மதிப்பிலான கலப்பட நெய்

சிபிஐ (CBI) தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு (SIT) இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 'போலே பாபா டைரி' மற்றும் அதனுடன் தொடர்புடைய போலி நிறுவனங்களிடமிருந்து சுமார் 68 லட்சம் கிலோ கலப்பட நெய் பெறப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ₹250 கோடி ஆகும். இந்த நெய்யில் பாமாயில் மற்றும் சில நச்சுப் பொருட்கள் கலக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 11 கோடி பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். லட்டு விநியோக முறையின்படி, எந்த பக்தர்களுக்குக் கலப்பட லட்டு கிடைத்தது என்பதைக் கண்டறிய இயலாது என்றும், முக்கியப் பிரமுகர்களுக்கு (VVIP) வழங்கப்பட்ட லட்டுகளிலும் இந்த வேறுபாட்டைக் கண்டறிய முடியவில்லை என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்குரிய பிரசாதத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

33
சுப்பாரெட்டியிடம் 8 மணிநேரம் விசாரணை

முன்னாள் டிடிடி தலைவர் மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி (YSRCP) எம்பி ஒய்.வி.சுப்பாரெட்டியிடம் சிறப்பு விசாரணைக் குழு சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தியது. ஆய்வக அறிக்கையில் கலப்படம் இருப்பது தெரிந்தும் ஏன் கொள்முதல் அனுமதிக்கப்பட்டது என்ற கேள்விக்கு, அந்த அறிக்கை தனது கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்றும், தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைப்படியே கொள்முதல் நடந்ததாகவும் அவர் பதிலளித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக சுப்பாரெட்டியின் முன்னாள் உதவியாளர் சின்ன அப்பண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சிறப்பு விசாரணைக் குழு தனது முக்கியக் கண்டுபிடிப்புகளை நெல்லூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories