மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் புதிய விதிகளுடன் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வேலை நாட்கள் 100-லிருந்து 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், பயோமெட்ரிக் வருகைப்பதிவு மற்றும் வேலை இழப்பு உதவித்தொகை போன்ற அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் இந்த திட்டம் புதிய பெயரிலும், புதிய விதிமுறைகளுடனும் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் வேலை நாட்கள் 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதால், கிராமப்புற குடும்பங்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்பு கிடைக்க உள்ளது.
இதுவரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) என்ற பெயரில் செயல்பட்டு வந்த திட்டம், இனி "வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்" என்ற புதிய பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், தமிழக அரசும் அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
27
125 நாட்கள் வேலை உத்தரவாதம்
இந்த திட்டத்தின் மிகப்பெரிய மாற்றமாக, ஒவ்வொரு தகுதியான கிராமப்புற குடும்பத்திற்கும் ஆண்டுக்கு வழங்கப்படும் வேலை நாட்கள் 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர கிராமப்புற குடும்பங்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பும், நிலையான வருமானமும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
37
15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும்
வேலை கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் வேலை வழங்க முடியாவிட்டால், சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வேலை இழப்பு உதவித்தொகை வழங்கப்படும்.
புதிய நடைமுறையின்படி, வேலை வழங்கப்படாத முதல் 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட தினக்கூலியின் குறைந்தபட்சம் நான்கில் ஒரு பங்கு உதவித்தொகையாக வழங்கப்படும். அதன் பின்னரும் வேலை கிடைக்காவிட்டால், தினக்கூலியின் குறைந்தபட்சம் பாதி தொகை வேலை இழப்பு நிவாரணமாக வழங்கப்படும்.
57
பயோமெட்ரிக் வருகை பதிவு
திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், வேலைக்கு வரும் தொழிலாளர்களின் வருகை இனி பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும். இதன் மூலம் போலியான வருகை பதிவுகளைத் தடுக்கவும், ஊதியம் நேரடியாக தகுதியானவர்களிடம் சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
67
மத்திய - மாநில அரசுகள் இணைந்து நிதி
இந்த திட்டத்திற்கான மொத்த நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன. தமிழகத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் இந்த புதிய திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
77
கிராமப்புற மக்களுக்கு பெரிய நம்பிக்கை
வேலை நாட்கள் அதிகரிப்பு, வேலை கிடைக்காவிட்டால் உதவித்தொகை, பயோமெட்ரிக் பதிவு உள்ளிட்ட மாற்றங்கள் கிராமப்புற தொழிலாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும், வருமான உறுதியையும் வழங்கும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.