ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய வன வள மதிப்பீடு 2025-ன்படி, இந்தியா வனப்பரப்பில் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய மாநில வன அறிக்கையின்படி, நாட்டின் பசுமைப் பரப்பு அதிகரித்தாலும், அடர்ந்த காடுகளின் தரம் குறைந்து வருவது கவலையளிக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) உலகளாவிய வன வள மதிப்பீடு 2025 (Global Forest Resources Assessment 2025) அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த வனப்பரப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் தரவரிசை 10-வது இடத்தில் இருந்த இந்தியா 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், வனப்பரப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியா 3-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
24
அதிக வனவளம் கொண்ட நாடுகள்
இந்த வன வள மதிப்பீடானது, தனிப்பட்ட நாடுகள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையிலும், உறுப்பு நாடுகளின் ஆய்வுக்குப் பின்னரும் வெளியிடப்படுகிறது. உலகளவில் அதிகபட்ச வனப்பரப்பைக் கொண்டுள்ள நாடுகளில் ரஷ்யா (832.6 மில்லியன் ஹெக்டேர்), பிரேசில் (486 மில்லியன் ஹெக்டேர்), கனடா (68.8 மில்லியன் ஹெக்டேர்), அமெரிக்கா (308.89 மில்லியன் ஹெக்டேர்) ஆகியவை முன்னணியில் உள்ளன.
இந்தியாவின் வரையறையின்படி, ஒரு ஹெக்டேருக்கு மேல் பரப்பளவில் அடர்த்தியான மரங்களைக் கொண்ட அனைத்து நிலங்களும் வனப்பகுதி ஆகும். இந்த நிலத்தில் ரப்பர், காபி, தேங்காய் உள்ளிட்ட தோட்டங்களும் அடங்கும்.
34
அமைச்சர் பூபேந்தர் யாதவ் கருத்து
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ஐ.நா. அமைப்பின் அறிக்கையில் இந்தியாவின் முன்னேற்றம் பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார். இது நிலையன வன மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலை குறித்த நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
இந்தத் தரவரிசையில் இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வனப் பாதுகாப்பு, காடு வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் வெற்றிக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பசுமைப் பரப்பளவு அதிகரித்துள்ளபோதிலும், வனங்களின் பெரும் பகுதிகள் சீரழிந்துள்ளதையும், தோட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் இந்திய மாநில வன அறிக்கை 2023 எடுத்துரைத்துள்ளது.
2011 முதல் 2021 வரை, பத்து ஆண்டுகளில் 40,709.28 சதுர கி.மீ பரப்பளவில் வன அடர்த்தி குறைந்துள்ளதாகவும், மிக அடர்ந்த காடுகள் மற்றும் மிதமான அடர்ந்த காடுகள் திறந்த காடுகளாக மாறியுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.