ஜம்மு மற்றும் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாறு காணாத மழை, சாலைகள் மற்றும் பாலங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கதுவா மாவட்டத்தில் உள்ள ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில், சஹார் காட் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அதன் குறுக்கே இருந்த முக்கிய பாலம் சேதமடைந்தது. வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், இரு பாலங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
கதுவா மாவட்ட துணை ஆணையர் ராஜேஷ் சர்மா கூறுகையில், "பழைய பாலம் பெரும் சேதமடைந்துள்ளது. புதிய பாலத்தின் நிலை குறித்தும் சந்தேகம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதையும் மூடிவிட்டோம். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே பாலம் குறித்து முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். மேலும், சேதமடைந்த பாலத்தின் மீது ஏறி விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.