தூங்குவதற்கு முன்னதாக செய்யக்கூடாத முக்கியமான விஷயங்கள்..!!

First Published Jan 7, 2023, 9:05 AM IST

நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு  இரவு முழுவதும் நன்றாக தூங்குவது முக்கியம். படுக்கைக்கு முன் நாம் செய்யும் சில விஷயங்கள் தூக்கத்தை சீர்குலைக்கும், எனவே நமக்கு போதுமான தூக்கம் கிடைக்காமல் போனால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய் பாதிப்பு, பக்கவாதம் மற்றும் வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 
 

உணவு மற்றும் தண்ணீரைப் போலவே தூக்கமும் மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது. இரவு முழுவதும் நன்றாக தூங்குவதன் மூலம், அடுத்தநாள் முழுவதும் நம் உடலுக்கு சுறுசுறுப்பு மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. மேலும் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயமும் குறைகிறது. ஒருவேளை உங்களுக்கு போதுமான தூக்கமில்லாமல் போனால், உயர் இரத்த அழுத்தம், டைப் 2 நீரிழிவு பிரச்னை, மாரடைப்பு, பக்கவாதம், வலிப்பு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். அதனால் உறங்கச் செல்வதற்கு முன்பு இரவில் குறிப்பிட்ட செயல்பாடுகளை தவிர்ப்பதன் மூலம், எந்தவித பிரச்னையும் ஏற்படாமல் வாழலாம்.
 

போன் பார்க்காதீர்கள்

நன்றாக தூங்குவதற்கு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் உங்கள் மொபைல் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், படுக்கைக்கு முன் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்துவது உங்கள் உடலின் இயற்கையான தூக்கம்-விழிப்பு சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் நல்ல தூக்கம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.

exercises

உடற்பயிற்சி செய்யக்கூடாது

உடற்பயிற்சி செய்வது நம் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது, ஆனால் ஒரு நேரத்தில் அதை அதிகமாக செய்தால், அது நம் தூக்கத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இது அடுத்த நாள் நம்மை சோர்வடையச் செய்யலாம், மேலும் இது நமது மன அழுத்தத்தையும் அதிகரிக்கும்.
 

டீ, காபி வேண்டாம்

சிலர் தங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க படுக்கைக்கு செல்லும் முன் டீ அல்லது காபி குடிக்க விரும்புகிறார்கள்.  அவ்விரு பானங்களிலும் காஃபின் என்கிற வேதிப் பொருள் உள்ளது. தூங்கும் முன் காஃபின் கலந்த பொருட்களை எடுத்துக் கொண்டால், இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். காஃபின் உங்கள் உடலின் இயற்கையான கடிகாரத்தை சீர்குலைக்கிறது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது.
 

அதிகம் சாப்பிட வேண்டாம்

இரவில் அதிகமாக சாப்பிட்டால், போதுமான தூக்கம் வராமல் போகலாம். கலோரிகள் அதிகம் உள்ள உணவை உண்பது செரிமானத்தை தாமதப்படுத்தி உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். இதனால் உறக்குவது சிரமமாக இருக்கும்.

வேலை செய்யக்கூடாது

அதிகநேரம் உழைப்பது கூட உடலுக்கு தீமையை ஏற்படுத்தும். வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வது இருதய நோய் பாதிப்பு, பக்கவாதம் மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். சிலர் இரவு உறங்குவதற்கு முன் அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். இதனால் அவர்களுடைய தூக்கம் பாதிக்கப்பட்டு, உடல்நலம் பெரியளவில் பாதிக்கப்படும். இரவு உணவிற்குப் பிறகு, ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், மீண்டும் அலுவலகப் பணிகளை செய்ய வேண்டாம்.

click me!