இந்த உணவுகளை மறந்தும் டீ உடன் மட்டும் சாப்பிட்டு விடாதீர்கள்..!!

First Published Jan 19, 2023, 11:56 AM IST

குறிப்பிட்ட உணவுகளை டீ சாப்பிடுவதற்கு முன்பு அல்லது டீ சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் வயிற்றில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
 

இந்தியாவில் மிகவும் பிரபலமான பானம் எது என்று கேட்டால், சந்தேகமில்லாமல் பால் கலந்த தேநீர் என்று சொல்லிவிடலாம். பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் டீ அல்லது காபியுடன் தங்கள் நாளைத் தொடங்குவார்கள். இப்போது, ​​நாளின் பல்வேறு நேரங்களில் சோர்வு, சலிப்பு அல்லது தூக்கம் வரும்போது கூட டீ குடிக்கத்தான் பலரும் விரும்புகின்றனர். இதன்மூலம அவர்களுக்கு ஏதோ உயிர்ச்சக்தி கிடைப்பதாக அவர்கள் நம்புகின்றனர். டீ குடிப்பது என்றால் டீ குடிப்பது மட்டுமில்லாமல், அதனுடன் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது, பிஸ்கட், எண்ணெயில் பொரித்த கடி, பப்ஸ் போன்ற தின்பண்டங்கள் டீ உடன் சாப்பிடும் போது மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் தேநீருடன் உட்கொள்ளக் கூடாத சில உணவுகள் உள்ளன. அது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த உணவுகளை டீயுடன் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் கூட அறிவுறுத்துகிறார்கள்.

கீரைகள்

இரும்புச்சத்து நிறைந்த கீரைகள் மற்றும் காய்கற்களுடன் தேநீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தேநீரில் உள்ள 'டானின்' மற்றும் 'ஆக்சலேட்டுகள்' என்கிற பொருட்கள், குறிப்பிட்ட கீரைகள் மற்றும் காய்கறிகளில் இருந்து உடல் இரும்பு சத்தை உறிஞ்சுவதை தடுக்கிறது. இதனால் குறிப்பிட்ட பொருட்களை சாப்பிட்டும் நமக்கு பலனில்லாமல் போகிறது.

குளிர்ந்த உணவுகள்

தேநீர் அருந்துவதற்கு முன் அல்லது பின் குளிர்ந்த பொருட்களை உடனடியாக சாப்பிடுவது நல்லதல்ல. பழச்சாறுகள்- பழ சாலட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடவே கூடாது. முடிந்தவரை தேநீர் குடித்து ஒருமணி நேரமான பிறகு குளிர்ந்த பொருட்களை சாப்பிடுங்கள். 

எலுமிச்சை சாறு

இதை கேட்டால் பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். டீயில் எலுமிச்சை சாறு சேர்த்து லெமன் டீயாக குடிப்பவர்கள் ஏராளம். ஆனால் டீயை அப்படி குடிப்பது உடலுக்கு அவ்வளவு நல்லது கிடையாது என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் வாயு பிரச்சனை மற்றும் வயிற்று உப்புசம் அதிகரிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 

மஞ்சள்

மஞ்சள் பல மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலப்பொருளாகும். மஞ்சளை வெந்நீரில் கலந்து பாலில் கலந்து சாப்பிடலாம். ஆனால் டீயுடன் சேர்த்துக் கொள்ளும்போது, ​​வாயு-அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். அதனால் மஞ்சள் டீ போன்ற பானங்களை தவிர்த்துவிடுங்கள்.

தயிர்

டீயுடன் சாப்பிடக்கூடாத மற்றொரு விஷயம் தயிர். இதற்குக் காரணம் முன்பு சொன்ன அதே விஷயம்தான். அதாவது தேநீர் ஒரு சூடான பானம். ஆனால் தயிர் ஒரு குளிர் உணவு. இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு கேடு தரும். செரிமானப் பிரச்னை, வயிற்று உபசம் போன்ற பாதிப்புகள் ஏற்பட காரணமாக அமையலாம்.
 

click me!