
பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கம் கொண்டவர்களுக்கு உடல் எடையை குறைப்பது என்பது சவாலான காரியமாக உள்ளது. ஆனால் சில வீட்டு வைத்தியங்கள் இயற்கையாகவே வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க வெந்தயம்-சோம்பு தண்ணீர் சிறந்த தீர்வு தருகிறது. இது செரிமான ஆரோக்கியத்தை குணப்படுத்தவும், இயற்கையாக எடையை சமநிலைப்படுத்தவும், ஹார்மோன் பிரச்சனைகளை சரி செய்யவும், இன்சுலின் ஏற்ற இறக்கங்களை நிர்வகிக்கவும் உதவுகிறது. இந்த தண்ணீரின் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு வெந்தயம் சிறந்த தேர்வாகும். தினமும் வெதுவெதுப்பான நீரில் வெந்தயத்தை கலந்து குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலமாக எடை குறைகிறது. வெந்தய விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன இது குடல் இயக்கங்களை ஒழுங்கு படுத்தவும், பசியை அடக்கவும் உதவுகிறது. மறுபுறம் சோம்பு விதைகளில் கார்மினேட்டிவ் பண்புகள் நிறைந்துள்ளன. இது வயிறு உப்புசம் மற்றும் வயிறுகளில் நீர் தேங்குதல் ஆகிய பிரச்சினைகளை குறைக்கிறது. ஆரோக்கியமான செரிமான அமைப்பு, உடல் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதை உறுதி செய்கிறது. மேலும் மோசமாக ஜீரணிக்கப்படும் உணவுகளில் இருந்து கொழுப்புகள் சேர்வதையும் தடுக்கிறது.
வெந்தயம் கார்போஹைட்ரேட் உறிஞ்சதலை மெதுவாக்குகிறது. இதன் காரணமாக சர்க்கரை அளவு ஒழுங்கு படுத்தப்படுகிறது. மேலும் பசியும் குறைக்கப்படுகிறது. வெந்தயத்தை உட்கொள்வதன் மூலம் உடலில் சேர்க்கப்படும் கலோரிகள் திறமையாக எரிக்கப்படுகிறது. பசி கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சியை மாற்றத்தின் ஊக்கம் ஆகிய இரண்டு செயல்கள் காரணமாக எடை இழப்புக்கு வெந்தயம் உதவி புரிகிறது. வெந்தயம் மற்றும் சோம்பு கலந்த நீரை அதிகாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பெருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் இரண்டுமே கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்த உதவும் நச்சு நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. வெந்தயம் ஹார்மோன் சமநிலைக்கும் உதவுகிறது. PCOS தொடர்பான பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கு வெந்தயம் சிறந்த பலன் இருக்கிறது.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு ஸ்பூன் சோம்பை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலை எழுந்ததும் இந்த கலவையை வடிகட்டி வெதுவெதுப்பான நிலையில் குடிக்கலாம். விரும்பியவர்கள் வடிகட்டிய வெந்தயம் சோம்பு விதைகளை மென்று சாப்பிடலாம். இதில் அதிக நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைகளும் தீரும். இந்த தண்ணீர் கசப்பாக இருப்பதாக தெரிந்தால் சிறிதளவு தேன் சேர்க்கலாம். சர்க்கரை நோய் இருந்தால் தேன் அல்லது நாட்டு சர்க்கரை போன்ற எந்த பொருளையும் சேர்க்காமல் அப்படியே குடிக்கலாம். 1 ஸ்பூன் வெந்தயம், 1 ஸ்பூன் சோம்பு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். இதை வெந்நீரில் கலந்து அருந்தி வரலாம் அல்லது இரண்டையும் நீரில் இட்டு கொதிக்க வைத்து தேநீர் போல குடித்து வரலாம்.
வெந்தயம் மற்றும் சோம்பு பொதுவாக பாதுகாப்பானவை என்றாலும் சில ஒவ்வாமைகளை ஏற்படுத்தலாம். அதிகப்படியான வெந்தயம் உட்கொள்ளல் வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம். வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு வெகுவாக குறையலாம். எனவே நீரிழிவு நோயாளிகள், பலவீனமானவர்கள், உடல் மிகவும் மெலிந்தவர்கள் இந்த தேநீரை குடிக்கக்கூடாது. ஏற்கனவே தைராய்டு, நீரிழிவு, வேறு ஏதேனும் ஹார்மோன் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் இதை எடுத்துக் கொள்வதற்கு முன்னர் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.