
சர்க்கரை நோய் வந்தாலே அடுத்தடுத்து வரிசையாக இரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனை, கண்பார்வை பிரச்சனை என பல பிரச்சனைகள் வர தொடங்கும். அதிலும் முக்கியமாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாக நிபுணர்கள் சொல்லுகின்றனர். ஆகவே, சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி தான் உங்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆபத்தை குறைக்கும். இத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதய நோய் வராமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டுமென்று இந்த பதிவில் காணலாம்.
உங்களுக்கு சர்க்கரை நோயும் இருக்கிறது, உடல் பருமனாகவும் இருக்கிறது என்றால், முதலில் உடல் எடையை குறைப்பது மிகவும் அவசியம். குறிப்பாக தொப்பை இருந்தால் அதை கண்டிப்பாக குறைக்க வேண்டும்.
உணவு கட்டுப்பாடுடன் இருந்தும் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்காமல் போனால் அதற்கு உடல் செயல்பாடுகள் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். எனவே தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் அவசியம். எனவே எண்ணெய் உணவுகள், வறுத்த பொறித்த உணவுகள், ஜங்க் ஃபுட்கள், இனிப்புகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக முழு தானியங்களை உங்களது உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். இது தவிர சிக்கன், மீன், முட்டை போன்ற உயர்தர புரத உணவுகளை அதிகமாக சாப்பிடலாம். மேலும் புதிய பழங்கள், காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளவும். ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களுக்கு விதைகள் நடஸ்களை சாப்பிடுங்கள்.
சர்க்கரை நோயும் இருக்கிறது, புகை பிடிக்கும் பழக்கமும் இருக்கிறது என்றால் உங்களுக்கு இதய நோய் ஆபத்து அதிகம் உள்ளன. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், இதய நோய் ஆபத்தை தவிர்க்கவும் புகை பிடிக்கும் பழக்கத்தை உடனே நிறுத்துங்கள்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் வாக்கிங் அல்லது பிறர் பயிற்சிகள் செய்தாலும் அதனுடன் சுவாசப்பயிற்சி மற்றும் யோகாசனங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். இதனால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும், இரத்த அழுத்தம் சீராக இருக்கும், மன அழுத்தம் குறையும், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதன் விளைவாக இதய நோய் ஆபத்து குறையும்.
உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவை செய்தாலும் வழக்கமான பரிசோதனைகள் கண்டிப்பாக செய்வது மிகவும் அவசியம். எனவே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.