
மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் தான் கணவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும். நிம்மதியாக வாழ நினைக்கும் எந்த ஆணும் தன்னுடைய மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதைத்தான் ஆங்கிலத்தில Happy wife, Happy Life என்பார்கள். மனைவியை மகிழ்சியாக வைக்க எதை செய்ய வேண்டும் என்பதை விட எதை செய்யக் கூடாது என்பது முக்கியம். திருமணத்திற்கு பிறகு ஆண்கள் செய்யும் எந்தெந்த விஷயங்கள் மனைவியை எரிச்சலடைய செய்யும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
கணவன் தன் மனைவியை எந்த பெண்ணோடும் ஒப்பிடவே கூடாது. குறிப்பாக தன் சொந்த அம்மாவுடன் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். தன்னை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை எந்த மனைவியும் விரும்பமாட்டார்கள். நீங்கள் தற்செயலாக இந்த காரியத்தை செய்தால் கூட அது விபரீதத்தில் தான் முடியும். முடிந்தவரை மனைவியை யாருடனும் ஒப்பிடாமல் இருக்க பழகுங்கள்.
உங்களுடைய மனைவியை எப்போதும் மதிக்க வேண்டும். மரியாதை இல்லாத எந்த உறவும் காயத்தை ஏற்படுத்தும். தனக்கு முன்னுரிமை அளிப்பதையும், மரியாதையாக நடத்துவதையும் ஒவ்வொரு பெண்ணும் விரும்புகிறாள். அதை மீண்டும் மீண்டும் ஓர் ஆண் செய்ய தவறும்போது அவருடைய மனைவி மிகவும் காயப்படுகிறார். இதனால் அந்த உறவில் சலிப்பி ஏற்படுகிறது.
பல விவாகரத்திற்கு காரணமாகச் சொல்லப்படுவது கணவன் தன் மனைவியை புரிந்து கொள்ள முயற்சி செய்யாததும், அவளுடன் நேரம் செலவிடாததும் தான். கணவர் தன் மனைவிக்கு நேரத்தை ஒதுக்க மறந்து அலட்சியம் காட்டினால் அங்கு நல்ல உறவு இருக்காது.
பொய் சொல்லி உறவை காப்பாற்றிக் கொள்ள பலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பொய் சொல்வது அந்த உறவில் இருக்கும் நம்பிக்கையை முற்றிலும் உடைக்கிறது. கணவர் அதிகமாக பொய் சொல்வதை எந்த பெண்ணும் விரும்புவதில்லை. முழுவதுமாக நேர்மையாக இல்லாவிட்டாலும் கூட எப்போதும் பொய் சொல்லும் குணத்தை யாவது ஆண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். பொய்கள் மனைவியை மிகவும் காயப்படுத்தும்.
கணவர் தன் மனைவி என்ன பேசுகிறார் என்பதை காது கொடுத்து கேட்க வேண்டும். நாள் முழுக்க வீட்டிலேயே இருக்கும் பல பெண்கள் கணவன் தங்களிடம் பேச வேண்டும் என நினைக்கிறார்கள். மனைவியின் பேச்சை கவனமாக கேட்கும் கணவர்களையே அவர்கள் ரசிக்கிறார்கள். தாங்கள் புரிந்து கொள்ளப்படுவதை மனைவிகள் விரும்புகிறார்கள். இதை செய்ய தவறும் ஆண்கள் மீது பெண்கள் வெறுப்பு கொள்கிறார்கள். சிலர் விவாகரத்து வாங்கிக் கொள்கிறார்கள்.
நீங்கள் அறிந்தோ, அறியாமலோ உங்களுடைய மனைவியை பிறருடன் தொடர்ந்து ஒப்பிட்டால் அது அவர்களுடைய சுயமரியாதையை சீண்டிவிடும். இதனால் உங்களுடைய உறவில் கசப்பான உணர்வுகள் வந்துவிடும். நீங்கள் உங்களுடைய திருமண உறவை காப்பாற்ற பல ஆயிரங்களை செலவு செய்ய வேண்டியது இல்லை. உங்களுடைய நேரத்தில் சில நிமிடங்களை மனைவிக்காக ஒதுக்கி அவர் சொல்வதை காது கொடுத்து கேட்டாலே போதும். இதை நீங்கள் செய்ய தவறும் போது உங்கள் உறவில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் எழுவதை தவிர்க்க முடியாது.