'குழந்தையை கருவில் சுமக்கும் அப்பா' நெகிழ வைக்கும் மனைவி மீதான அன்பு..! கேரளாவில் சுவாரசியம்

First Published Feb 3, 2023, 12:05 PM IST

திருநம்பி சஹாத் தன் மனைவி மீது கொண்டுள்ள அன்பால், தன் வயிற்றில் குழந்தையை சுமக்கும் நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. அதன் முழுவிவரம் உள்ளே... 

இந்தியாவில் முதல் மூன்றாம் பாலின தம்பதியினர் ஜியா- சஹாத். கேரளா, கோழிக்கோடு உம்மாலத்தூரைச் சேர்ந்த இவர்கள், தற்போது பெற்றோராக இருப்பதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுடைய முதல் குழந்தையை உலகிற்கு அறிமுகப்படுத்த போவதில் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் இருக்கும் தம்பதிகள் குறித்த சுவாரசிய தகவல்களை இங்கு காணலாம். 

சில மாதங்களுக்கு முன்பு அனைவரும் அறிந்த காதல் கதை சஹத், ஜியாவின் உடையது. சஹத் பெண்ணாகப் பிறந்தாலும், தன்னுடைய விரும்பத்தின்படி ஆணாக மாறியவர். அப்படிதான் தன் உடல் மாற்றங்களால் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாற்றி கொண்டவர் ஜியா. இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதிகளாகினர். தற்போது தங்களின் முதல் குழந்தையை கையில் ஏந்தும் நாள்களையும் நெருங்கிவிட்டனர். ஆனால் இந்த பயணம் எளிமையாக இருக்கவில்லையாம். 

முதலில் இத்தம்பதியினர் குழந்தையை தத்தெடுக்க நினைத்துள்ளனர். ஆனால் சட்டம் அவர்களுக்கு கொஞ்சம் சாதகமாகயில்லை. நம் நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்கள் திருமணம் அனுமதிக்கப்படிருந்தாலும் சட்டத்தில் சில விஷயங்கள் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சவாலாகவே உள்ளது. சஹத், ஜியாவும் சட்டப்பூர்வ செயல்முறை சவாலாக இருந்தது. இதையடுத்து அவர்களே குழந்தை பெற்றெடுக்கும் முடிவுக்கு வந்துள்ளனர். ஆணாக இருந்தாலும் சஹாத்திற்கு கருவுறும் எண்ணம் இருந்துள்ளது. 

ஆணாக மாறிய பிறகு கருவுற்றால் பொது சமூகம் என்ன நினைக்கும் என முதலில் சஹாத் தயங்கியுள்ளார். தான் விட்டு விலகி வந்த பெண்மைக்குள் மீண்டும் அடியெடுத்து வைப்பதை சவாலாகவும் நினைத்துள்ளார். இருப்பினும் தன் மனைவி ஜியாவின் மீது இருந்த அளவு கடந்த அன்பும், அவருக்கு இருந்த தாயாக வேண்டும் என்ற அடக்க முடியாத ஆசையும் சஹாத்திற்கு உத்வேகம் ஊட்டியுள்ளன. கர்ப்பம் தரிக்க சஹாத் முடிவு செய்துள்ளார். 

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சஹாத்திற்கும், ஜியாவிற்கும் வழிகாட்டியுள்ளனர். சஹாத்துக்கு சிறப்புப் பரிசோதனைகள் செய்து, உடல்நிலையில் எவ்வித பிரச்னையும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். அதன் பின்னர் இத்தம்பதியினர் சிகிச்சையை ஆரம்பித்துள்ளனர். சஹாத் ஏற்கனவே பெண்ணாக இருந்து ஆணாக மாறியதனால், அவருடைய மார்பகங்கள் அப்போதே அகற்றப்பட்டன. ஆனால் கருப்பையை மருத்துவர்கள் மாற்றியிருக்கவில்லை.  

அனைத்து சிகிச்சைகளும் வெற்றிகரமாக முடிந்ததனால் இன்னும் ஓரிரு மாதங்களில் இத்தம்பதியினர் தங்களின் முதல் குழந்தையை எதிர்நோக்கி மகிழ்வுடன் காத்திருக்கின்றனர். இப்படிதான் குழந்தை பெற்றெடுக்கும் இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர். தற்போது சஹாத் ஆரோக்கியமான 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக சஹாத், அவருடைய மனைவி ஜியாவுடம் எடுத்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

தங்களுக்கு குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் வங்கியில் இருந்து பாலை வாங்கி குழந்தைக்கு கொடுக்க முடிவு இத்தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். பெற்றோராகவிருக்கும் அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

இதையும் படிங்க:பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா? அங்க மச்சம் இருக்க பெண்களை தோற்கடிக்கவே முடியாதாம்!

இதையும் படிங்க: குழந்தைங்க நெகட்டிவ்-ஆ பேசினால் என்ன பண்றது? இப்படி யோசிக்க சொல்லி கொடுங்க!!

click me!