
காபி மற்றும் டீ பழக்கத்திற்கு வருவதற்கு முன்பு, நம் முன்னோர்கள் சத்து மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறுவதற்காக இயற்கையான பானங்களையே உட்கொண்டனர். பசுவின் பால், வெதுவெதுப்பான நீரில் நெய் அல்லது தேன் சேர்த்துக் குடிப்பதுடன், துளசி, இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் மிளகு கலந்த மூலிகை கஷாயத்தையும் அருந்தினர்.
தென்னிந்தியாவில், முந்தைய நாள் மிச்சமான சோற்றில் தண்ணீர் மற்றும் மோர் ஊற்றிப் புளிக்க வைத்த நீராகாரத்தை உட்கொண்டனர். இது உடலுக்குக் குளிர்ச்சி அளிப்பதோடு, ஒரு இயற்கை ப்ரோபயாடிக்காகவும் செயல்பட்டது. மேலும், கிராமப்புறங்களில் மோர், கேழ்வரகுக் கூழ் மற்றும் பார்லி தண்ணீர் போன்றவை காலை நேர முக்கியப் பானங்களாக இருந்தன.
இதையும் படிங்க : Air Fryer : ஏர் ஃபிரையரில் சமைக்கும்போது கேன்சர் அபாயத்தை அதிகரிக்காமல் இருக்க இந்த 7 விஷயங்களை கவனிங்க!
16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காபி இந்தியாவிற்குள் நுழைந்தது. பாபா புடான் என்ற சூஃபி துறவி, ஏமன் நாட்டில் உள்ள மோச்சா நகரத்திலிருந்து 7 பச்சை காபி கொட்டைகளைத் தன் உடையில் மறைத்து இந்தியாவுக்கு கடத்தி வந்தார். அவற்றை கர்நாடகாவின் சிக்மகளூர் அருகே உள்ள சந்திரத்ரோண மலைகளில் நட்டார். இப்போது அந்த மலைகள் பாபா புடான்கிரி என்று அழைக்கப்படுகின்றன. அதே சமயம், வடகிழக்கு இந்தியாவில் சிங்போ பழங்குடியினர் காட்டுத் தேயிலையை மருந்தாகப் பயன்படுத்தினாலும், பிரிட்டிஷ் ஆட்சியில்தான் தேயிலை வர்த்தக ரீதியாக வளர்ந்தது. 1823-ல், ராபர்ட் புரூஸ் என்ற ஸ்காட்டிஷ் அதிகாரி அசாமில் உள்ளூர் தேயிலைச் செடிகளைக் கண்டுபிடித்தார். தேயிலை வர்த்தகத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க, கிழக்கிந்திய கம்பெனி 1830-களில் இருந்து அசாம் மற்றும் டார்ஜிலிங்கில் பெரிய அளவில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியது.
இதையும் படிங்க : Green Chillies : வீட்டுத் தொட்டியில் பச்சை மிளகாய் வளர்க்க 6 ஈஸி டிப்ஸ்!
ஆரம்பத்தில், பணக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள்தான் காபி, டீ குடித்தனர். அப்போது இது ஒரு ஆடம்பர பானமாக கருதப்பட்டது. 1903-ல் பிரிட்டிஷ் அரசு அமைத்த 'இந்தியன் டீ மார்க்கெட் எக்ஸ்பான்ஷன் போர்டு' தீவிரமாக விளம்பரம் செய்தது. ரயில் நிலையங்கள், தொழிற்சாலைகள், நகர சந்திப்புகளில் இலவசமாக டீ கொடுத்தனர். பாலும் சர்க்கரையும் சேர்த்து கொதிக்க வைக்கும் இந்திய ஸ்டைல் 'சாய்' முறையை பிரபலப்படுத்தினர். இதனால், சாமானியர்களுக்கும் டீ பழக்கமானது. அதே நேரத்தில், தென்னிந்தியாவில் ஃபில்டர் காபி அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறியது. இப்படி, பிரிட்டிஷாரின் வர்த்தக நோக்கங்களுக்காகத் தொடங்கிய ஒரு பயணம், இன்று ஒவ்வொரு இந்தியரின் காலையையும் காபி, டீயின் நறுமணத்துடன் தொடங்க வைத்துள்ளது.
இதையும் படிங்க : Chicken : சிக்கன் சாப்பிட்டால் உண்மையிலேயே உடல் சூடு அதிகமாகுமா? தெரிஞ்சுக்கோங்க!