சென்னை போரூரில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர் சத்யராஜ், தனது மனைவி ரோசியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவியின் தலையை சுவற்றில் மோதிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
சென்னை போரூர் ஆர்.இ.நகரை சேர்ந்தவர் சத்யா (எ) சத்யராஜ் (40), கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோசி (35). இந்த தம்பதிக்கு சூர்யா (9) என்ற மகனும், நித்யா (7) என்ற மகளும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சத்யராஜ் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை அடித்து உதைத்துள்ளார்.
24
மயங்கி கீழே விழுந்த மனைவி
இந்நிலையில் கடந்த 24ம் தேதி இரவு குழந்தைகள் இருவரும் தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வழக்கம் போல மது போதையில் வீட்டுக்கு வந்த சத்யராஜ் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் போதையில் இருந்த கணவர் சத்யராஜ் ஆத்திரத்தில் மனைவியின் தலையை சுவற்றில் மோதியதில் அலறியபடி மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து சத்யராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
34
மனைவி கொலை
ரோசியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சத்யராஜ் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ரோசியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரோசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சத்யராஜை கைது செய்தனர். குடிபோதையில் கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரண்டு குழந்தைகள் தாயை இழந்து தவித்து வருகின்றனர்.