தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வருபவர் டி.ராஜேந்தர். நடிகர் சிம்புவின் தந்தையான இவருக்கு கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி.ஆருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதாகவும் கூறினர்.
தற்போது பூரண உடல்நலம் பெற்றதை அடுத்து, இன்று காலை 4 மணிக்கு அவர் குடும்பத்தினருடன் சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.ராஜேந்தர், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “நான் சென்னையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன் என சொன்ன போது, என் மகன் சிம்பு தான் அமெரிக்காவில் சிகிச்சை எடுக்கலாம் என சொன்னார். அங்கு என்னை கவனித்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி. குறிப்பாக அமெரிக்க தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி. பழைய தெம்போடு தாய் மண்ணுக்கு வந்துள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி” என கூறினார் டி.ஆர். சிம்புவின் திருமணம் குறித்து பேசிய அவர், “திருமணம் என்பது கடவுள் தீர்மானிப்பது. இருமணம் சேர்ந்தால் தான் திருமணம். எங்கள் வீட்டிற்கு நல்ல குணமுடைய திருமகள், மருமகளாக வருவாள்” என கூறிவிட்டு சென்றார்.
இதையும் படியுங்கள்... புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெட்பிளிக்ஸ்! குஷியான ரசிகர்கள்!