'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் நடித்த போது, நண்பர்களாக இருந்த சூர்யா, ஜோதிகா பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிகளின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து விட்டதால், தொடர்ந்து மாயாவி, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்தனர். கிட்ட தட்ட நான்கு வருடங்கள் காதலித்து, பெற்றோர் சம்மதம் பெற்று, கடந்த 2006-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து நடித்தது சில்லுனு ஒரு காதல் திரைப்படம் தான். அதன்பின் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவர்கள் இருவரும் இணைந்து 2டி என்கிற பட நிறுவனத்தை தொடங்கி, தொடர்ந்து பல்வேறு தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி திருமணத்துக்கு பின்னர் ஜோதிகா நடித்த பெரும்பாலான படங்களை 2டி நிறுவனம் தான் தயாரித்தது. இந்நிலையில், நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், அவர்கள் இருவரும் பாலா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.