இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... பாடும் நிலாவுக்கு பர்த்டே- பாடகர் எஸ்.பி.பி பற்றிய 15 டக்கரான தகவல்

First Published Jun 4, 2023, 10:03 AM IST

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரைப்பாற்றிய 15 சுவாரஸ்ய தகவல்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

* பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

* எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தந்தையும் ஒரு நடிகர் ஆவார். அவர் பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளதோடு, ஒரு பிரபலமான ஹரிகதா விரிவுரையாளராகவும் இருந்தார். 

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனந்தபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பு படித்து வந்த நிலையில், டைபாய்டு காச்சல் காரணமாக அவர் படிப்பை கைவிட நேர்ந்தது.

* பாடகி எஸ்பி சைலஜா, எஸ்.பி.பி.யின் உடல்பிறந்த சகோதரி ஆவார். அதே போல், எஸ்.பி.பியின் மகன் சரணும் ஏராளமான பாடல்கள் பாடி உள்ளார். அவரும் தன் தந்தையை போல் தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட 16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

* எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இதையும் படியுங்கள்... ஐபிஎல் முடிந்த கையோடு குக் வித் கோமாளி ஷோவில் எண்ட்ரி கொடுத்த கிரிக்கெட் வீரர்கள் - செம்ம டுவிஸ்ட் வெயிட்டிங்

* எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாடும் நிலா என்கிற புனைப்பெயரும் உண்டு. நிலாவை மையமாக வைத்து ஏராளமான தமிழ் பாடல்களை அவர் பாடி உள்ளதால் அவருக்கு இந்த பெயர் கிடைத்தது.

* பாடல்கள் பாடுவதை தவிர சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வந்த எஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில்  சுமார் 48 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்த படம் ஸ்ரீராம் ஆதித்யாவின் தேவதாஸ் (2018).

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் டப்பிங் கலைஞராக பணியாற்றியிருக்கிறார். தெலுங்கில் கமல் படம் ரிலீஸ் ஆனால் அதற்கு பெரும்பாலும் குரல் கொடுப்பது எஸ்.பி.பி.தான். ரஜினிக்கும் ஒரு சில படங்களில் டப்பிங் பேசி இருக்கிறார்.

* எஸ்பி பாலசுப்ரமணியம் 12 மணி நேரத்தில் இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 21 கன்னட பாடல்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.

* ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம், இதுதவிர தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடக அரசுகளின் மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

* மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான பத்மஸ்ரீ (2001) மற்றும் பத்ம பூஷன் (2011) ஆகிய விருதுகளையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்... கார் விபத்தில் உண்மையில் நடந்தது என்ன? காருல ஏறவே பயமா இருக்கு! மனம் நொந்து இர்ஃபான் கொடுத்த விளக்கம்!

* தான் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திய அனந்தபுரம் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அறிமுக பாடலை எஸ்.பி.பி தான் அதிகளவில் பாடி உள்ளார். எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடலும் அண்ணாத்த படத்திற்காக ரஜினிக்கு தான் பாடி இருந்தார்.

* கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி. ஒரு மாதம் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள்...  கோரமண்டல் ரயில் விபத்து! வாய்திறக்காத ரஜினி, விஜய், சூர்யா! முதல் ஆளாக ஆறுதல் பதிவு போட்ட ராகவா லாரன்ஸ்!

click me!