நடிகை சமந்தா மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதன்காரணமாக கடந்த 4 மாதங்களாக அவர் எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளாமல் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். இடையே அவரது யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆனபோது மட்டும் அப்படத்திற்காக இரண்டு பேட்டிகளைக் கொடுத்திருந்தார். அதில் கடந்த சில மாதங்கள் தான் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறி அழுததை பார்த்து அவரது ரசிகர்கள் மனமுடைந்து போயினர்.
இந்நிலையில், இன்று சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள புராண கதையம்சம் கொண்ட சாகுந்தலம் என்கிற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சமந்தாவும் கலந்துகொண்டார். நடிகை சமந்தா நீண்ட இடைவெளிக்கு பின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இது என்பதால், அவர் நிகழ்ச்சிக்கு வந்ததும் ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்து மாஸ் எண்ட்ரி கொடுத்தனர்.
இதையடுத்து இந்நிகழ்ச்சியில் பேசிய இப்படத்தின் இயக்குனர் குணசேகர், இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என பாராட்டி பேசினார். அவரின் பேச்சைக் கேட்டதும் எமோஷனல் ஆன சமந்தா, கண்ணீர் விட்டு அழுதார். சாகுந்தலா கதாபாத்திரத்திற்கு பலரை நடிக்க வைக்க முயன்றதாகவும், இறுதியில் தயாரிப்பாளர் நீலிமா தான் சமந்தாவை பரிந்துரை செய்ததாக குணசேகர் தெரிவித்தார்.