
கூத்தாடிகளுக்கு நாட்டு நடப்பை பற்றி என்ன தெரியும்? என்று வெறும் வாயிக்கு பக்கோடா கிடைத்தது போல், சிலர் வார்த்தைகளை உருட்டி கொண்டிருந்தாலும், அரசியலுக்கும்... நடிகர்களுக்கும் இடையேயான தொடர்பு பின்னிப் பிணைந்ததாகவே பார்க்க படுகிறது. அரசியலில் கால் பதித்து, மக்கள் மனதை வென்று முதல்வர் பதவியை வென்று மக்களை ஆட்சி செய்த நடிகர்கள் ஏராளம். எம்.ஜி.ஆர்... துவங்கி என்.டி.ஆர், பவன் கல்யாண் என சொல்லிக்கொண்டே போகலாம்.
குறிப்பாக தமிழகத்தில், எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக அரசியலில் நிலைத்து நின்ற திரைப்பட பிரபலங்கள் என்றால், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் மட்டுமே. இவர்களைத் தொடர்ந்து அரசியலில் இடம் பிடிக்க நினைத்து அரசியல் கட்சியை துவங்கிய, சிவாஜி கணேசன், டி ராஜேந்தர், கார்த்திக், சரத்குமார், உள்ளிட்ட பலர் பேறுக்காக அரசியல் கட்சி வைத்திருந்தாலும்... அரசியலில் வெளிச்சத்தில் காணாமல் போன கானல் நீராகவே உள்ளனர்.
அதே போல் உலக நாயகன் கமல்ஹாசன் 2018-ஆம் ஆண்டு 'மக்கள் நீதி மய்யம்' என்கிற கட்சியை துவங்கி... 180 இடங்களில் போட்டியிட்டு , ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் போனார். அட்லீஸ்ட் கமல்ஹாசனாவது வெற்றி பெற்றிருந்தால், இவருடைய கட்சி கவனம் பெற்றிருக்கும். ஆனால் அவரும் தோற்றது தான்... இவருடைய கட்சி பலத்த அடி வாங்க காரணமாக அமைந்தது. அரசியலுக்கு வந்த போது, டார்ச் லைட்டை விட்டெறிந்து மக்களுக்கு எந்த அரசியல் கட்சி டிவி கொடுப்பதாக கூறி கடுமையாக விமர்சித்தாரோ தற்போது அதே கட்சியுடன் தான் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார். மேலும் சமீபத்தில் முடியவடிந்த பாலிமெண்ட் தேர்தலில் திமுக கட்சி ஒரு சீட் கூட கொடுக்காமல் கமல்ஹாசனை வஞ்சித்ததாக பார்க்கப்பட்டது.
கமல் ஆற்றில் ஒரு கால்.. சேற்றில் ஒரு கால் என்கிற பழமொழிக்கு ஏற்ப அரசியலில் இருந்து கொண்டே பட பணிகளிலும் படு பிசியாக செயல்பட்டு வருகிறார். ரஜினி அரசியல் களத்தில் வருவதாக கூறி, பின்னர் அந்தர் பல்டி அடித்ததால்... கமல் போட்ட கால்குலேஷன் கொஞ்சம் சொதப்பியதாகவே பார்க்கப்பட்டது.
ரஜினி இடத்தை பிடித்து விடலாம் என டார்கெட் செய்து... கமல் அரசியல் களத்தில் இறங்கி தத்தளித்து கொண்டிக்கும் நிலையில், கடந்த சில வருடங்களாக ஆடியோ லான்ச் நிகழ்ச்சிகளில் அரசியல் வசனம் பேச துவங்கி, அதிரடியாக மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும், தன்னுடைய ரசிகர் மன்றத்தின் மூலம் உதவிகள் செய்து... அரசியல் களத்தில் களமிறங்கி கலக்கி வரும் தளபதி விஜய் நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் உள்ள வி சாலையில் தன்னுடைய முதல் கட்சி மாநாட்டை சிறப்பாக நடத்தி, அரசியல் களத்தையே அதிர வைத்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்கி இருந்தால் கூட இந்த அளவுக்கு ஒரு வரவேற்பு இருந்திருக்குமா? என்பது சந்தேகமே என அரசியல் வட்டாரமே கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இந்த மாநாட்டை பார்த்து வருகிறது. மாநாட்டுக்கு வருபவர்களுக்கு முறையான ஏற்பாடுகள் செய்து கொடுக்காதது ஒருபுறம் விஜய்யை விமர்சனம் செய்ய வைத்திருந்தாலும்... நேற்று இவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சும்மா நெருப்பாக இருந்தது. விஜய் அரசியல்வாதி அவதாரம் எடுத்த பின்னர் தான் இவர் இந்த அளவுக்கு பேசுவாரா? என ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிரட்சியுடன் பார்த்தனர்.
விஜய் மேடையில் பேசியபோது.... பல விஷயங்களில் ரஜினியை பார்க்க முடிந்தது. குறிப்பாக குட்டி கதை சொல்லும் போது கெட்ட பையன் சார் அவன், கரப்ஷன், அரசியலில் மாற்றம் வேண்டும் என ரஜினிகாந்த் போலவே கைகளை உயர்த்தி, அவருடைய பாடி லாங்குவேஜை பின்பற்றியது போல் பார்க்கப்பட்டது.
விஜய்க்கு முன்பே அரசியலுக்கு வர வாய்ப்பிருந்தும்... ரஜினி தனக்கு கிடைத்த வாய்ப்பை முதலில் தவற விட்டது தான், அதன் பின்னர் அவர் அரசியலுக்கு வர முடியாமல் போக காரணம் என கூறப்பட்டது. ஜெயலலிதா மறைக்கு பின்னர் அரசியலுக்கு வரும் ஆர்வம் ரஜினிக்கு இருந்த போதிலும் அவருடைய உடல்நிலை ஒத்துழைக்காமல் போனது. விஜய் இன்று எடுத்த முடிவை ஏன், ரஜினி 1990-களில் எடுக்கவில்லை... யாரை பார்த்து பயந்தார்? ஏன் ரஜினியின் அரசியல் கனவு அஸ்தமனம் ஆனது என்பது பற்றி பார்க்கலாம்.
1990-களிலேயே ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்திய நிலையில்... ரஜினிகாந்த் அரசியலில் விருப்பம் இருப்பதாக கூறினாலும், எப்போது அரசியலுக்கு வருவேன் என கூறவில்லை. இதை தொடர்ந்து எம்.ஜி.ஆர் இறந்த பின்னர், அவருடைய வெற்றிடத்தை நிரப்ப ரஜினியால் மட்டுமே முடியும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அப்போது ரஜினி கைநிறைய சம்பளம் பெரும் முன்னணி நடிகராக இருந்ததால்... அந்த வாய்ப்பை தரவ விட்டார். அதே போல் 1996-ஆம் ஆண்டு வந்த வாய்ப்பையும், படங்களுக்காக ஏற்ற மறுத்தார். இதன் பின்னர் திமுக கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட ரஜினி ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்ததால். ஜெயலலிதா இருந்தவரை ரஜினியை அரசியலுக்கு உள்ளே வரவிடாமல் கட்டம் கட்டினார்.
வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவேன் என கூறி வந்த ரஜினி... ஒருவழியாக 2021 டிசம்பர் 30- அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்தார். இடையில் இவருடைய உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் இவரது முடிவை மாற்ற வைத்தது. பின்னர் அரசியலுக்கு இனி வர வாய்ப்பே இல்லை என கூறினார். இதை தொடர்ந்து முழுமையாக ஒரு நடிகராகவே இருந்து வருகிறார்.
ஆனால் இதுவே சரியான நேரம் என்பதை புரிந்து 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதை உதறி தள்ளிவிட்டு தளபதி விஜய் அரசியலில் இணைந்துள்ளார். TVK கட்சியில் விஜய் மட்டுமே ஊரறிந்த பிரபலம் என்பதால்... அரசியலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்தே அடுத்த ஆண்டு வர உள்ள தேர்தலை சந்திக்க உள்ளார். இந்த முறை தேர்தலில் கோட்டையை பிடிப்பாரா தளபதி என்கிற ஆர்வம் அதிகரித்துள்ளது. விஜய் ரஜினி போல் யோசிக்காமல் களமாட முடிவு செய்துள்ளதால் அவரது முயற்சியே இவருக்கு திருவினையை தேடி தரும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.