
Dhanush Hit Movies as a Director in Tamil : நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என்று பன்முக கலைகஞராக தமிழ் சினிமாவில் ஜொலித்து கொண்டிருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் ஆரம்பித்து ராயன் படம் வரையில் ஏராளமான படங்களில் நடித்து வெற்றியும், தோல்வியும் கொடுத்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
தனுஷ் ஒரு நடிகர் மட்டுமின்றி இயக்குநராகவும் ஒரு சில படங்களை இயக்கினார். பா பாண்டி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தன்னை ஒரு இயக்குநராக காட்டினார். இந்தப் படத்தில் ராகிரண், ரேவதி, பிரசன்னா, தனுஷ், மடோனா செபாஸ்டியன், சாயா சிங், திவ்யதர்ஷினி என்று ஏராளமான நட்சத்திரங்க நடித்திருந்தனர்.
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த் பவர் பாண்டி தனது ஓய்விற்கு பிறகு மகன் ராகவன் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். பேரக்குழந்தைகள் மீது அன்பு கொண்டவர். ஆனால், அவரால் வீட்டில் சும்மா இருக்க முடியாமல், வீட்டிற்கு வெளியே ஒரு சில வேலைகளில் ஈடுபடுகிறார். இது ராகவனுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஜிம் இன்ஸ்ட்ரக்டர், சைடுகிக் மற்றும் சினிமா ஸ்டண்ட்மேன் போன்ற சில பகுதிநேர வேலைகளுக்குச் செல்கிறார். இது பாண்டிக்கும் ராகவனுக்கும் இடையே மோதலை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் பா பாண்டி படத்தோட கதை. இந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. ஏனென்றால் படம் ஆவரேஜ் படமாக அமைந்தது.
பா பாண்டி எடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு ராயன் படத்தை இயக்கினார். ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் கதைகளை மையபடுத்திய இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி செல்வராகவன் என்று ஏராளமானோர் நடித்திருந்தனர். பாஸ்ட் புட் கடை ஓனரான தனுஷ் தனது 2 தம்பி மற்றும் ஒரு தங்கையுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். இதில் எஸ்ஜே சூர்யா மற்றும் சரவணன் ஆகியோர் கேங்ஸ்டர். ஒரு கட்டத்தில் தனுஷிற்கும் கேங்க்ஸ்டருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தோட கதை. கிட்டத்தட்ட ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.160 கோடி வரையில் வசூல் குவித்தது. தனுஷ் இயக்கிய இந்த படம் அவருக்கு ஹிட் படமாக அமைந்தது.
தனுஷ் இயக்கிய 3ஆவது படம் தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்தப் படத்தில் தனுஷ் தனது அக்காவின் மகன் பவிஷ் நாராயணனை ஹீரோவாக அறிமுகம் செய்தார். இந்த கதையை முதலில் தனுஷை வைத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் தான் இயக்க இருந்தது. ஆனால், அந்த கதையை வாங்கிய தனுஷ் படத்தை அவரே இயக்க முடிவு செய்து எடுத்து முடித்து இப்போது ரிலீஸூம் பண்ணியிருக்கிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ், சரண்யா பொன்வண்ணன், சரத்குமார், ஆடுகளம் நரைன், வாரியர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.
பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். சினிமா விமர்சகரான ரமேஷ் பாலா தனது எக்ஸ் பக்கத்தில் வழக்கமான கதை தான். ஆனால், சுவாரஸ்யமாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சத்துடன் இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார். ரசிகர்களின் ஆதரவை வைத்து பார்க்கும் போது இந்தப் படம் தனுஷின் இயக்கத்தில் வந்த 2 ஆவது ஹிட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.